Ootyயில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சீனிவாசா அவன்யூ சாலை பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் சென்னை தி.நகரில் இயங்கிவரும் M/S.Nathan Foundation நிறுவனத்தின் இயக்குநர் கே.வி.சங்கரலிங்கம் என்பவர் பத்திரிக்கையில் கொடுத்த விளம்பரத்தில், உதகமண்டலத்தில் பிளாட்டுகளை கட்டி விற்பனை செய்து வருவதாகவும், அவர்களே அங்கு 8 மாதத்திற்குள் பிளாட்டுகளை கட்டிடம் கட்டி கொடுக்கப்படும் என்றும் அப்படி கட்டி தராத பட்சத்தில் அதற்கு வாடகை அல்லது இழப்பீட்டு தொகை தருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதை நம்பி தானும் தனது மனைவி, மைத்துனர் மற்றும் இரண்டு நண்பர்கள் பெயரிலும் மொத்தம் 6 பிளாட்டுகள் வாங்க வேண்டி அதற்குண்டான பணம் ரூ.1,45,42,815/-த்தை கொடுத்ததாக கூறியுள்ளனர். ஆனால் நாதன் நிறுவனத்தின் ஒப்பந்தந்தத்தின்படி 8 மாதத்திற்குள் பிளாட்டுகளை கட்டி கொடுக்காமலும் அதற்குண்டான மாத வாடகை தொகையினை கொடுக்காமல் M/S. Nathan Foundation நிறுவனத்தின் இயக்குநர் ஏமாற்றிவந்துள்ளார்.
அதனை அடுத்து சென்னை தியராயநகரை சேர்ந்த கே.வி.சங்கரலிங்கம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிபடையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவண மோசடி பிரிவில் (EDF-2) வழக்குபதிவு செய்து புலன் விசாரணை செய்துள்ளனர்.
மத்திய குற்றபிரிவு நம்பிக்கை ஆவண மோசடி பிரிவின் கீழ் போலீசார் சங்கரலிங்கம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.