கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வெள்ளலூர் கஞ்சிகோணம்பாளையம், கம்பர் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சரவணன் (41). இவரிடம் போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த சக்திவேல் (43) என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கமாகி உள்ளார். அப்போது தான் பொதுப்பணித்துறை அதிகாரிக்கு ஓட்டுனராக பணியாற்றி வருவதாக கூறி பழகி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சரவணனிடம் அவருக்கும், அவரது உறவினர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல தவணைகளில் ரூ.13 லட்சம் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 10.ஆம் தேதி அரசு பணிக்கான பணி நியமன ஆணை எனக் கூறி கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு, சரவணன் அரசு அலுவலகத்திற்கு சென்ற போது, அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சரவணன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவையில் பதுங்கி இருந்த சக்திவேலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் வண்ணார் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் என்பதும், இவர் கோவையில் தனது மனைவி ஜெயசித்ராவுடன் தங்கி, ஆக்டிங் ஓட்டுநராக வேலையை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல் மற்றும் அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட ஜெயசித்ராவை போலீசார் கைது செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.