மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்
கோவை செட்டிபாளையம் பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (43) கூலி தொழிலாளி. இவர் முத்துலட்சுமி (38) என்பவரை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமிக்கு மாணிக்கம் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஆண்டு ரவிக்குமாரை பிரிந்து முத்துலட்சுமி கோவை செட்டிபாளையம் கலைஞர் நகர் பகுதியில் மாணிக்கத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை செட்டிபாளையத்தில் உள்ள முத்துலட்சுமியின் வீட்டிற்கு வந்த ரவிக்குமார் இது குறித்து கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான், மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துலட்சுமியை குத்தியுள்ளார். இதில் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து ரவிக்குமாரை மடக்கி பிடித்தனர்.
மேலும் முத்துலட்சுமியை மீட்டு ஆம்புலென்ஸில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் ரவிக்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.