ஒரு தலை காதல் விவகாரம். இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்தி தாக்குதல். வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது. ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு. தலைமறைவான தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.பிரபல சினிமா டைரக்டர் சுசீந்திரன் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் மதுரையை சேர்ந்த ராஜகுமரன் (வயது 21) என்பவரை காணவில்லை என நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் காணாமல் போன ராஜகுமரனை இன்று அதிகாலை அரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து அவரே ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் மதுரையில் பாத்திமா கல்லூரியில் படித்த போது ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். படிப்பு முடிந்ததும் அந்த இளம் பெண் *naukri app* மூலம் வேலை தேடி உள்ளார் பெசன்ட் நகரில் அக்ஷயா குரூப் ஆஃப் கம்பெனி என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 2024 அக்டோபர் மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார். சில மாதங்களிலேயே அந்த நிறுவனத்தின் உரிமையாளர், டேனியல் ராஜ், தன்னை காதலிக்க சொல்லி அந்த இளம் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் அரும்பாக்கத்தில் வசிக்கும் சினிமா உதவி இயக்குனர் ராஜகுமரனை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும் டேனியல் ராஜ் விடாப்பிடியாக அந்தப் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த இளம் பெண் கடந்த மார்ச் மாதம் வேலையை விட்டு நின்றுள்ளார். ராஜகுமரனை ஒழித்தால் தான் தனது ஆசை நிறைவேறும் என நினைத்த டேனியல் ராஜ் சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சிவ செந்தமிழன் என்பவரை அணுகி, தனது ஒரு தலை காதல் விவரங்களை தெரிவித்து, உதவும் படி கேட்டுள்ளார். மேலும் சில லட்சங்களை சிவ செந்தமிழனிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கறிஞர் சிவ செந்தமிழன் தனக்கு தெரிந்த மற்றொரு வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவரை தொடர்பு கொண்டு இந்த அசைன்மெண்டை முடித்துக் கொடுங்கள் என நேற்று கூறியுள்ளார். இதையடுத்து சந்திரசேகர் தனக்கு தெரிந்த நபர்களை அழைத்துச் சென்று அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் தங்கியிருந்த ராஜகுமரனை கடத்திச் சென்று அடித்து பின்னர் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே விட்டு விட்டு சென்றுள்ளனர் என தெரிய வந்தது. ராஜகுமரனை கடத்தி மிரட்டியவர்களுக்கு கூலியாக சந்திரசேகர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அந்த இளம் பெண்ணுடனான காதலை முறித்துக் கொள்ளாவிட்டால் அனாதை பிணமாக நேரிடும் என மிரட்டியுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி சந்திரசேகர், கண்ணம்மா பேட்டை லலித் ஆதித்யா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் திவாகர், அகஸ்டின் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கடத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான மூன்று பேரையும் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட டேனியல் ராஜ், வழக்கறிஞர் சிவ செந்தமிழன் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.