நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்கலத்தை சேர்ந்தவர் கவின் வயது (25). ஐ.டி ஊழியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இளம்பெண் தற்போது நெல்லையில் சித்த மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களது காதல் விவகாரம் அவர்கள் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இளம்பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் விவாகரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் பெண்ணை சந்திப்பதற்காக நெல்லைக்கு வந்துள்ளார். அப்போது பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்ற வாலிபர் கே.டி.சி நகரில் வைத்து கவின் என்ற வாலிபரை ஓடஓட விரட்டி கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சில மணி நேரத்திலே வாலிபர் சுஜித் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் ஆஜராகினார்.
தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி இருவருமே உதவி சார்பு ஆய்வாளர்களாக காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். இருவரின் தூண்டுதலால் தான் சுர்ஜித் கவினை கொலை செய்துள்ளார் என கவின் தரப்பு உறவினர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் நெல்லை காவல்துறையினர் சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வந்தனர்.

தொடர்ந்து இது தொடர்பாக ரகசிய இடத்தில் வைத்து இருவரிடமும் காவல்நிலையத்தில் 2வது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல் சார்பு உதவி ஆய்வாளர்களான இருவரையும் டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். இத்தகைய ஆணவக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.