நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக ‘பறவைகளின் சொர்க்கம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அரசு ரோஜா பூங்காவில் ரோஜா மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள பறவைகளின் கண்காட்சி நடைபெறுகிறது.


நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்று வரும் கோடை விழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள அரசு ரோஜா பூங்காவில் 21-வது ஆண்டு ரோஜா கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கண்காட்சியின் முக்கிய அம்சமாக, ரோஜா மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு பறவைகளின் பிரம்மாண்ட உருவங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன.
‘பறவைகளின் சொர்க்கம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் ரோஜா மலர்களைப் பயன்படுத்தி அன்னப்பறவை, இருவாட்சி உள்ளிட்ட பல்வேறு அரிய பறவைகளின் வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான ரோஜா செடிகள் பூத்துக் குலுங்கும் அரசு ரோஜா பூங்கா, வண்ண மலர்களின் மணமும் அழகும் நிறைந்த காட்சியால் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த ரோஜா கண்காட்சி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கோடை விழாவின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ள இந்த ரோஜா பறவை அலங்காரங்களை நேரில் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…
