கணவன் வேறோரு பெண்ணுடன் உறவில் இருந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி.
சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (ஹரிஹந்த்) வசித்து வருபவர் தேவி(48).. இவருக்கு கடந்த 2017 ஆண்டு முரளி (56) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் முரளி வடபழனி பகுதியில் சொந்தமாக பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவி தனது நகைகளை அடகு வைத்து வடபழனியில் வீடு ஒன்று வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் குழந்தையின்மை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் 2024 ஆண்டு முதல் முரளி தனது மனைவியை பிரிந்து வடபழனியில் வாங்கிய வீட்டில் வசித்து வருகிறார். நேற்று தேவி வடபழனி சென்று தனது கணவரிடம் வீடு வாங்க கொடுத்த நகைகளை மீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கணவர் வீட்டில் வேறோரு பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவி இது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு முரளி இந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியதை கேட்டு மனமுடைந்த தேவி நேராக வீட்டிற்கு வந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் தேவி மயங்கி கிடப்பதை பார்த்த உறவினர்கள் பதறி அடித்து கொண்டு தேவி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் தகவல் அறிந்து அரும்பாக்கம் போலீஸார் நேரில் சென்று தேவியிடம் விசாரணை நடத்தி புகாரை பெற்று வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முரளியை இன்று காலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.