ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் 21 வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் முதன் முறையாக அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் , ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனும் இணைக்கப்பட்டது. முதலில் ஜி20 மாநாட்டிற்கு வருகை தந்திருந்த ஆப்ரிக்க யூனியன் பிரதிநியை பிரதமர் மோடி, ஆரத்தழுவி மண்டபத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பு நாடாக இணைக்கும் தீர்மானத்தை பிரமர் மோடி முன்மொழிந்தார். அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டதால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆப்பிரிக்க யூனியனில் மொத்தம் 55 நாடுகள் உள்ள நிலையில், அதனை ஜி20 கூட்டமைப்பில் இணைத்தால் ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக ஜி20 கூட்டமைப்பு மிகப்பெரிய அமைப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இதன்மூலம் ஜி20 கூட்டமைப்பு என்பது இனி ஜி21 நாடுகளின் கூட்டமைப்பாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.