ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி
ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்து கவனத்தை பாஜக அரசு திசைதிருப்புகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தில் ஓபிசிக்கு உள் ஒதுக்கீடு வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இன்றே அமல்படுத்த வேண்டும். அரசு செயலாளர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். இந்தியாவின் முதுகெலும்பாக ஓபிசி பிரிவினர் உள்ளனர். நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்க மறுக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் 5 சதவீத நிதிதான் ஓபிசி அதிகாரிகளிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரமே ஆதிக்க சாதிகளிடம்தான் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் இன்று 10 ஆண்டுகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும். ஒன்றிய அரசில் உள்ள 90 துறை செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள்” என்றார்.