கர்நாடக சட்டமன்றம் அவையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், பஸவன்னா ஆகியோர் படங்களுடன் சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார்.
![Karnataka Assembly](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/12/karnataka-assembly-300x202.jpg)
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள சுவர்ண சவுதாவில் நாளை துவங்கி வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை பத்து நாட்கள் கர்நாடக குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டத்தொடர் என்பதால் இதில் பல அதிரடி காட்சிகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த கூட்டத்தொடரில் வாக்காளர் தகவல் திருடப்பட்ட சம்பவம், 40 % கமிஷன் குற்றச்சாட்டு, காவல்துறை தேர்வு முறைகேடு , மகாராஷ்டிரா உடன் எல்லை விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
கர்நாடக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று பெலகாவி நகரில் உள்ள சுவர்ண சவுதா சட்டமன்ற கட்டிடத்தில் துவங்கியது. இன்று அவை நடவடிக்கை துவங்கும் முன்பு சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, முதல்வர் மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அவையின் சுவரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், பஸவன்னா ஆகியோர் படங்களுடன் சாவர்க்கர் படம் திறந்து வைக்கப்பட்டது.
முக்கிய தலைவர்களுடன் சாவர்க்கர் படம் திறந்து வைக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சித்தராமையா டி கே சிவகுமார் ஆகியோர் தலைமையில் சட்டமன்ற வளாக நுழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சாவர்க்கர் படத்தை அவையில் வைப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த தலைவர்கள் படங்களுடன் சாவர்க்கர் படத்தை வைத்து அவையின் கண்ணியத்தை பாஜக சிதைத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளனர்.