திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்க்கு முக்கிய பொறுப்பு
திமுக செய்தி தொடர்பு துணை செயலாளராக, முன்னாள் அதிமுக நிர்வாகி கோவை செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் நிர்வாகியான கோவை செல்வராஜ் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். அங்கு அதிருப்தி அடைந்த கோவை செல்வராஜ், கடந்த டிசம்பர் மாதம் அதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது அதிமுக ஒரு கம்பெனி போல செயல்படுகிறது, திராவிட பாரம்பரியம் தமிழ்நாட்டில் என்றும் செயல்பட அதிமுக தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்க வேண்டும், கொல்லைப்புறமாக ஆட்சி நடத்திய ஈபிஎஸ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரை விமர்சிக்க தகுதியில்லை என பகிரங்க விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த 4 மாதங்களில் முன்னாள் அதிமுக நிர்வாகி கோவை செல்வராஜ்க்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை திமுகவின் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக நியமனம் செய்து அக்கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மீனவர் அணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.