மன்னிப்பு கேட்க வேண்டியது எடப்பாடிதான்- டிடிவி தினகரன்
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்விப்புரட்சியை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஏழைப்பங்காளராக, சாமானிய மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எனக்கும், சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தான் உள்ளனர். கோடநாடு வழக்கில் மடியில் மனம் இருக்கிறது, அதனால்தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார்.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எனக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் மூவருக்கும் துரோகம் செய்த பழனிசாமிதான். எங்கள் 3 பேரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். DMK Files 2-ஐ அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடைபெறும் போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு.” என்றார்.