செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிய வழக்கு- ஐகோர்ட்டுக்கு மாற்றம்
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிடக்கோரி வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.


இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும், கலால் துறையும் மற்ற 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதனுடன் தொடர்புடைய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கையும் சென் னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.


