தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி கால தாமதம் செய்துவந்தார். இதனை ஒரு பெரும் குற்றச்சாட்டாக முன்வைத்து வந்த தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், உச்சநீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி , தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதாவது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஒப்புதல் அளிக்க ஒரு மாதம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து ஆளுநருக்கு முரணான பார்வை இருந்தால், அதுகுறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க 3 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மசோதா 2வது முறையாக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டால் அதற்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் எனவும் தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர்களுக்கான காலக்கெடு விதித்துள்ள தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும் எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்தத் தீர்ப்பில் தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியிருப்பதால், இனி ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த பத்து மசோதாக்கள் என்னென்ன :
1. ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தர் ஆக்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல்.
2. கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
3. மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
4. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சர் வேந்தர் ஆவதற்கான மசோதாவுக்கும் ஒப்புதல்.
5. தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சரை வேந்தர் ஆக்கும் மசோதாவுக்கும் ஒப்புதல்.
6. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்.
7. தமிழ் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்.
8. தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் இரண்டாம் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்.
9. கால்நடை இரண்டாம் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்.
10. மீன்வள பல்கலைக்கழக இரண்டாவது திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சட்டமன்றங்களின் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்படும் முற்போக்கான சட்டமன்ற சீர்திருத்தங்களை, மத்திய அரசு பரிந்துரைக்கும் ஆளுநர்கள் தடுக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் நன்றி தெரிவித்து வரவேற்கிறோம். மத்திய-மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுப்பதில் இது மற்றொரு முக்கியமான படியாகும், மேலும் உண்மையான கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான போராட்டத்தில் ஒரு மைல்கல் வெற்றியாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
We thank and welcome today’s historic judgment of the Hon’ble Supreme Court, reaffirming the legislative rights of State Legislatures and putting an end to the trend of Union government-nominated Governors stalling progressive legislative reforms in Opposition-ruled states.
This… pic.twitter.com/6QoEOY4t2Q
— M.K.Stalin (@mkstalin) April 8, 2025