நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் வசித்து வருகிறார்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
மூச்சுத் திணறல் காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான திரு. செல்வராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என கூறிப்பிட்டார்.
1975-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த திரு. செல்வராஜ் அவர்கள் சுமார் அரைநூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார்.
திரு. செல்வராஜ் அவர்கள் நான்கு முறை நாகை மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களுக்கு இரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை செல்வராஜ் அவர்கள் முன்னெடுத்துள்ளார்.
என் மீது கொள்கைரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர் திரு. செல்வராஜ் அவர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் திரு. செல்வராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றியிருந்தேன்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் அவர்களது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் அவர்கள் இன்று காலை இரண்டு மணி அளவில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இயற்கை அடைந்தார் என்ற செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளில் தன் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய செல்வராஜ் அவர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைநிலைக் குழு உறுப்பினர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், தேசியக் குழு உறுப்பினர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார்.
1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் விவசாயிகள் – தொழிலாளர்கள் நலன் காக்க தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் காக்கவும், தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர் செல்வராஜ் ஆவார்.
என் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டிருந்த இனிய தோழரான செல்வராஜ் அவர்களை இழந்துவிட்ட துயரில் நான் வருத்தம் அடைகிறேன்.அவரை இழந்த துயரத்தில் உள்ள அவரது துணைவியார் கமலவதனம், அவரது மகள்கள் செல்வ பிரியா, தர்ஷினி ஆகியோருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும், தெரிவித்து கொள்கிறேன் என்று மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச்செயலாளரான வைகோ அவர்கள் கூறியிருந்தார்.