Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம்: சாட்சிகளிடம் விசாரணை

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம்: சாட்சிகளிடம் விசாரணை

-

- Advertisement -

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக துணை வேந்தர் உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிப்போக காரணம் என்ன?- விரிவான தகவல்!
File Photo

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக விதிகளை மீறி பூட்டர் என்ற தனியார் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த துணைவேந்தர் ஜெகநாதன் நீதிமன்றத்தில் பெற்றிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முறைகேடு தொடர்பான வழக்கை காவல் துறை விசாரிக்கலாம் என்றும் அனுமதி அளித்திருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் ரமலி ராம்லட்சுமி வழக்கு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கி உள்ளார். இந்த வழக்கில் சாட்சியாக கருதப்பட்ட பல்கலைக்கழக தொழிலாளர் சங்க செயலாளர் சக்திவேல், அமைப்பு செயலாளர் கிருஷ்ணவேணி ஆகியோருக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.அதன்படி இருவரும்  மாலை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தனர்.

பூட்டர் அமைப்பின் நடவடிக்கை குறித்து சக்திவேல் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அளித்த தகவல்களை பதிவு செய்து கொண்ட உதவி ஆணையாளர் ரமலி ராமலட்சுமி வழக்கு தொடர்பாக எப்போது அழைத்தாலும் நேரில் வந்து சாட்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்டவர்களை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

MUST READ