தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி ஏ மைதானத்தில் கடந்த 27 ம் தேதியில் இருந்து 48வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை புத்தகக் காட்சி திறந்தவெளி அரங்கில் ஒரு பதிப்பகத்தின் ( டிஸ்கவரி புக் பேலஸ்) சார்பில் தமிழ்த்தேசியம் ஏன் ?எதற்கு? எப்படி? என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது வழக்கமாக பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்தான நீராருங் கடலுடுத்த பாடலுக்கு பதிலாக பாரதிதாசன் தமிழ்தாயை உருவகம் செய்து பாடிய வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே என்ற பாடல் ஒளிபரப்பப்பட்டது.இது புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகவும் பாடப்பட்டு வருகிறது. எனவே அரசின் உதவி பெற்று நடத்தக்கூடிய ஒரு பொது நிகழ்வாகவும் இருக்கக்கூடியதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது சர்ச்சைக்கு உள்ளானது.
மேலும், புத்தகக் காட்சியின் ஐந்தாவது நுழைவாயிலில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பாதை என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சொக்கலிங்கம் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சொக்கலிங்கம், வெற்றிகரமாக சென்னை புத்தக காட்சி நடைபெற்று இருக்கிறது, இதுவரை 10 லட்சம் வாசகர்கள் வந்துள்ளனர். ஒவ்வொரு பதிப்பாளர்களும் இந்த புத்தகக் காட்சியில் நூல்களை அறிமுகம் செய்வார்கள். அதுபோல் ஒரு பதிப்பகத்தின் சார்பில் புத்தகம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது நான் இது இலக்கிய மேடை அரசியல் பேசுவது கிடையாது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். புத்தகங்கள் இலக்கியங்களைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே கூறினேன். ஆனால் சீமான் புத்தகங்கள் பற்றி பேசிவிட்டு அரசியல் மற்றும் தனிநபர் தாக்குதலை நடத்தினார்.அதனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
48 வருடத்தில் நடக்காது ஒன்று தற்போது நடந்து உள்ளது. தன்னையும், அந்தப் பதிப்பகத்தை முன்னிலைப்படுத்துவதற்கு இந்த சங்கத்தை பயன்படுத்திக் கொண்டார். புத்தகக் காட்சிக்கு விருந்தினராக வந்த சீமான் எப்படி இப்படி செய்யலாம் அவருடைய கண்ணியத்தை காக்க அவர் தவறி விட்டார் என்று சொக்கலிங்கம் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பபாசியின் செயலாளர் முருகன், இங்கு வந்து அரசியல் பேசவும், பாதை வைப்பது குறித்து கேள்வி கேட்க சீமான் யார், எழுத்தாளர்கள் பெயரை நாங்கள் வைப்போம், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசை சார்ந்து நாங்கள் உள்ளோம் என்று கூறிய அவர், தமிழ் தாய் வாழ்த்து பாடலை மாற்றி பாடியதற்கு பபாசி சார்பில் அந்த புத்தக பதிப்பகத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்று பதிப்பகத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் பேசிய அவர், சீமானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அறிவு சார் உலகத்தில் வந்து சீமான் உலறிவிட்டு செல்வது நியாயமா என்று கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்தை பற்றியும் முன்னாள் முதலமைச்சர் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பதிப்பகம் திட்டமிட்டே தேசிய கீதத்தை மாற்றிப் பாடியுள்ளனர் என்று காட்டமாக கூறினார்.நீங்கள் அழைத்து வரக்கூடிய நபர் அரசியல் பேசக்கூடாது என்று பதிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த விகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்.கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை இந்த பிரச்சனையில் விடமாட்டோம் என்றார். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும், புத்தகம் வெளியிட்ட பதிப்பகம் திட்டமிட்டு இதை நடத்தி இருக்கிறது என்று முருகன் கூறினார்.
பதிப்பகத்திற்கு சோக்காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அவர்களின் விளக்கத்தை கேட்டு செயற்குழு, பொதுக்குழு முன் வைத்து அந்த பதிப்பகம் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு எல்லா அரசியலுக்கு கட்சியும் ஒன்றுதான். யாரையும் நாங்கள் விமர்சனம் செய்வது கிடையாது. இது எங்கள் நிலைப்பாடு என்று முருகன் தெரிவித்தார்.
சீமான் சர்ச்சையாக விவகாரத்தை முன்னுதாரணமாக வைத்து வரக்கூடிய காலங்களில் பபாசி மேடையில் வெளியிடப்படும் புத்தகங்கள் தொடர்பாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வரவுள்ளதாக முருகன் கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து – மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள சீமான்