ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்வதற்கோ தடை விதிக்க கோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தலைமை வழக்கறிஞர் சி.எஸ். ராமன் 2,500 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடங்கள் தமிழக கோவில்களில் காலியாக உள்ளது.
அதனை நிரப்பும் வகையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே உள்ள சட்ட விதிகளின்படியும் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுவதாகவும், எனவே இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்திருந்தனர். மனுதாரர்கள் தரப்பில் ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே அந்த கோவில்களுக்கு நியமனங்கள் செய்யக்கூடாது என தெரிவித்ததோடு, பிற கோவில்களுக்கு அர்ச்சகர்கள் நியமனம் செய்வதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று வாதம் வைக்கப்பட்டது.

ஏற்கனவே அர்ச்சகர் நியமனத்தின் போது ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது என்றும், தகுதி இல்லாத ஒரு நபர் நியமனம் செய்யப்பட்டதால் தான் வழக்கு தொடரப்பட்டது என்பதால் புதிதாக ஒரு கமிட்டியை உருவாக்கி அதன்படி வழிகாட்டல் செய்யப்பட்டால் தங்களுக்கு இந்த விவகாரத்தில் ஆட்சேபனை இல்லை என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இவ்வழக்கில் மற்றொரு மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தரப்பு, தமிழகத்தின் ராமேஸ்வரம் கோவிலில் குருக்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இது போன்ற விஷயங்களை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? என்றும் ,எனவே விரைந்து அர்ச்சகர்கள் மற்றும் குருக்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். தொடர்ந்து கோவில்களுக்கு அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நியமனம் செய்ய அரசு தயாராக உள்ளது.
அதையே நீதிமன்றத்தில் இப்போது தெரிவிப்பதாகவும், எனவே உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அர்ச்சகர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் அர்ச்சகர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை முதலில் நீக்க வேண்டும் எனவும் பின்னர், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அதில் பிற மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தரப்பு நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் அமர்வு, ஆகம கோவில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோவில்களை மூன்று மாதத்திற்குள் அடையாளம் காண தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும் ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சகர் மற்றும் மணியம் உள்ளிட்ட பணியிடங்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆகம விதிகள் பின்பற்றப்படாத கோவில்களில் அர்ச்சகர்கள், மணியம் உள்ளிட்ட பணியிடங்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கியதோடு ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க அனுமதி அளித்து வழக்கை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் 99% நிறைவேற்றி மகத்தான சாதனை செய்து வருகிறது – மா.சுப்பிரமணியன்