விஜயை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு தாறுமாறாக ஓடிய த.வெ.கவினரால் பரபரப்பு ஏற்பட்டது. 
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பரபரப்புடன் முடிந்தது. கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்ட இந்த நிகழ்வை ஒட்டி, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடைமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கூட்டம் நடத்த போலீசார் 32 கேள்விகள் எழுப்பியிருந்த நிலையில், அவற்றுக்கு தவெக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதோடு 52 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமாக:
5,000 பேருக்கு மேல் அனுமதி இல்லை, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் பங்கேற்க கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, தீயணைப்பு வசதிகள் அவசியம், சேதங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் பொறுப்பு, விஜய் வாகனத்தை பைக் உள்ளிட்ட வாகனங்களில் பின்தொடரக் கூடாது என்பன அடங்கும்.
சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்பட்டு, வெயிலை சமாளிக்க மேற்கூரை வசதி செய்யப்பட்டிருந்தது. 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4,900 நிர்வாகிகளுக்கு க்யூஆர் கோடு கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விஜய் காலை விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து காரில் அய்யாசாமிபட்டிக்கு சென்று கூட்டத்தில் உரையாற்றினார். திருச்சி விமான நிலையத்தில் விஜயை காண ஏராளமானோர் திரண்டனர். அவரது வாகனத்தை சுற்றி பூக்கள் தூவியதால் சில நேரம் வாகனம் நகர முடியாமல் போனது. பின்னர் போலீசார் தலையிட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.
வாகனம் புறப்பட்டதும், முன்பும் பின்னும் ஏராளமான தொண்டர்கள் டூவீலர்களில் பின்தொடர்ந்தனர். பலர் தலைக்கவசம் அணியாமல், சிலர் ஒரு கையால் வாகனம் ஓட்டியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
வாகனத்தை பின்தொடர்ந்து சென்றபோது, டூவீலரில் வந்த ஒருவர் நிலைதடுமாறி விழுந்தார். பின்னால் வந்த கார் அவர் மீது மோதியதாகவும், தொடர்ந்து வந்த வாகனங்களும் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. கூட்ட அரங்கிற்கு வெளியிலும் பெரும்பான்மையானோர் திரண்டிருந்தனர். விஜய் உள்ளே சென்றதும், சிலர் தடுப்புகளை உடைத்து, தாண்டி உள்ளே நுழைந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிலர் கீழே விழுந்தபோதும், பின்னால் வந்தவர்கள் அதனை பொருட்படுத்தாமல் முன்னேறியதாக கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் பலர் அச்சத்தில் வெளியேறியதாக தகவல். அரங்குக்குள் நுழைய சிலர் ஆம்புலன்சை வரவழைத்து, அதை உள்ளே விடுமாறு கோரியதாக கூறப்படுகிறது. கேட்டை திறந்ததும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பலர் முண்டியடித்து உள்ளே நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என கூறப்பட்டிருந்த போதிலும், கூடுதல் நபர்களை அனுமதிக்க திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
தி.மு.க. ஆட்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி – தவெக தலைவர் விஜய்


