அறிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைப்பு!
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், தெருநாய் பிரச்சினையைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு (Final Deadline) விதித்துள்ளது. தெருநாய்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இ விவகாரத்தைத் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒன்றிய அரசு சார்பில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தெளிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு இறுதி வாய்ப்பாக 2 வார கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நாடு முழுவதும் தெருநாய்கள் கடிப்பதால் பொதுமக்கள், குறிப்பாகச் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி இறுதிக்கெடு உத்தரவு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
