சிதம்பரம் அருகே பொழுதுபோக்கிற்காக குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்து குளித்த பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள். தட்டிக் கேட்டபோது தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேர் கைது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பவானி(24). சிதம்பரத்தைச் சேர்ந்த பவானியின் அண்ணன் சத்தியமூர்த்தி, அண்ணி ஐஸ்வர்யா, தம்பி ரஞ்சித் மற்றும் சத்தியமூர்த்தி நடத்தும் கலைக்குழுவில் வேலை செய்து வரும் திருநங்கை யாழினி, இளைஞர் ராகுல் ஆகிய 7 பேரும் நேற்று மாலை கடலூர் அருகே உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்கு கடலில் குளிக்க சென்றுள்ளனர். இதில் பவானி பாட்டாளி மக்கள் கட்சியில் குறிஞ்சிப்பாடி நகர் மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
பொழுதுபோக்கிற்காக வந்த அவர்கள் குளித்து விட்டு பவானி உள்ளிட்ட சிலர் கடற்கரை மணலில் நடந்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் குளித்த இடத்திற்கு அருகே உள்ள தியாகவல்லி கிராமம் ,லெனின் நகரைச் சேர்ந்த சிலர் அங்கு வந்துள்ளனர். அப்போது பவானி மற்றும் அவருடன் வந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி திட்டி உள்ளனர். இதைப்பார்த்த பவானியின் உறவினர்கள் உடனடியாக ஓடி வந்து இதை தட்டி கேட்டுள்ளனர்.
அதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவர்களை சரமாரியாக தாக்கினார். அப்போது அவர்களும் பதிலுக்கு தாக்கினர். இந்த தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடலூரில் உள்ள அதிகாரிகளுக்கு வீடியோவை அனுப்பி தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பவம் நடந்த இடம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என தெரிய வந்தது
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பவானி என்ற பெண்ணிடம் புதுச்சத்திரம் போலீசார் புகாரை பெற்று, அதன்பேரில் போலீசார் தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவேல் (24) தினேஷ் (21) சரவணன் (22) பிரவீன்(24) ஆகிய 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் புதுச்சத்திரம் போலீசார் மற்றும் சிதம்பரம் குற்றப்பிரிவு போலீசார் உள்ளிட்டோர் தியாகவல்லி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், சரவணன் ஆகிய 3 பேரையும் போலீசார் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணையின் முடிவில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள பிரவீன் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பவானி கூறுகையில், கடற்கரையில் குளித்து விட்டு வெளியே வந்தபோது இளைஞர்கள் கிண்டல் செய்தனர். எங்களுடன் வந்த குடும்பத்தினர் தட்டிக் கேட்டபோது அவர்களை அடித்தனர். பின்னர் எங்களையும் தாக்கினர். பயந்து அவர்களிடம் இருந்து தப்பித்து வேறு வழியாக சிதம்பரம் சென்று, அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்றோம். மேலும் கையில் சாதி சங்க சின்னத்தை பச்சை குத்தி இருந்ததை பார்த்துவிட்டுதான் அடித்ததாக கூறினார். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொழுதுபோக்கிற்காக கடற்கரைக்கு வந்த பெண்களை தாக்கி மிரட்டியதும், அதை தட்டிக் கேட்ட குடும்பத்தினரை தாக்கியதும், இந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதும், கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் இணைய வழி மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது