சுதந்திர போராட்ட வீரர்களை நடத்தும் விதமும் அவர்கள் மீது மத்திய அரசு காட்டப்படும் அக்கறையும் வேதனை அளிக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
96 வயதான உத்தம் லால் சிங் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் பிற இயக்கங்களில் பங்கேற்று சுதந்திற்காக போராடி உள்ளார். பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் பல முறை தண்டனை அனுபவித்த லால் சிங், 1982ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
1983ம் ஆண்டு பீகார் அரசு, ஓய்வூதிய வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் 2009ம் ஆண்டு வரை அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் 2009ல் பீகார் அரசு பரிந்துரை வழங்கியுள்ளது. பின்னர், 2017ம் ஆண்டில் மத்திய அரசு பீகார் அரசு அனுப்பிய பரிந்துரைகள் தங்களிடம் இல்லை என கூறியது. இருப்பினும், பல அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டும் பலன் கிடைக்காததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 1980 முதல் சுதந்திர போராட்ட வீரருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்தினை 6% வட்டியுடன், 12 வாரங்களில் மத்திய அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை நடத்தும் விதமும் அவர்கள் மீது காட்டப்படும் அக்கறையும் வேதனை அளிப்பதாக நீதிபதி கூறினார். மேலும் சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதியம் வழங்காமல் இருந்த மத்திய அரசுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.