ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தையை கன்னியாகுமரியில் நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் இடைத்தரகர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த 28 வயது நித்யாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவரது கணவர் எடிசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து ஈரோட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் நித்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கர்பமாக இருந்த போதே பிறக்கும் குழந்தையை விற்பனை செய்ய சந்தோசும் நித்யாவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஈரோடு கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த இடைத்தரகர்களை அணுகி உள்ளனர். இடைதரகர் செல்வி மற்றும் சிலர் மூலம் குழந்தையை கடந்த மாதம் 29.ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஜெயச்சந்திரன்- அகிலாராணி தம்பதியினருக்கு நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதில், கமிசனாக, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்ட செல்வி மீதி தொகையை சந்தோசிடம் கொடுத்துள்ளார். பணத்துடன் வீடு திரும்பிய சந்தோஷ் மற்றும் நித்யாவிற்கு இடையே பணத்தை பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், நித்யா தனக்கு பணம் வேண்டாம், குழந்தை தான் வேண்டும் என தகராறில் ஈடுபட்டதால், விற்பனை குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. சித்தோடு செவிலியர் மூலமாக தகவல் அறிந்த குழந்தைகள் நல அலுவலர் இது குறித்து போலீசாருக்கு புகார் அளித்ததன் பேரில் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், BNS 93 மற்றும் JJ act- 81.ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கன்னியாகுமரியில் இருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக, ஈரோடு கனிராவுத்தர்குளம் மற்றும் கருங்கல்பாளையம் பகுதிகளை சேர்ந்த இடைத்தரகர்கள் செல்வி, பானு, ராதாமணி மற்றும் ரேவதி ஆகிய நான்கு பேரை இன்று கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த தரகருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையை வாங்கி சென்ற கன்னியாகுமரி தம்பதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் குழந்தையை பெற்றோரே விலை பேசி விற்பனை செய்ததும், பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் சிக்கி கொண்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை