திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை சம்பந்தம் நகரை சேர்ந்தவர் விஜயா (50). இவர் சோம்பட்டு கிராமத்தை சேர்ந்த நந்தினி (40) என்பவருடன் இன்று இருசக்கர வாகனத்தில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கவரப்பேட்டை அருகேயுள்ள கீழ் முதலம்பேடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் விஜயா (50), நந்தினி (40) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய திருநெல்வேலியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்து கிருஷ்ணன்(36) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.