அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை, ஆளுநரின் ஒப்புதல் பெறாமலேயே அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் பாஜகவின் அனைத்து வாதங்களும் தள்ளுபடியாகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தார்மீக அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டு வந்துவிட்டது. அதை முடித்துவிட்டு வந்து அமைச்சராகி கொள்ளட்டும் என்று எதிர்க்கட்சிகள் மக்களிடம் போய் சொல்ல வேண்டும். திமுகவை தோலுரிக்கலாம். அதற்கு அரசியல் தளம் அதற்கு தயாராகவே உள்ளது. ஆனால் சட்டத்தை அதற்கு பயன்படுத்தக்கூடாது. நான் திரும்பவும் சொல்கிறேன். இன்றைக்கு செந்தில் பாலாஜி அனுபவிக்கும் வேதனைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம். நாளைக்கு எடப்பாடிக்கு இப்படி வரலாம். நிதின் கட்கரிக்கு இப்படி வரலாம். எந்த அமைச்சருக்கும், எந்த கட்சிக்கும் எதிர்காலத்தில் நிலைமை வந்தால், ஜனநாயகத்திற்கு அது நல்லது அல்ல. நாளைக்கு பதிவியில் இருக்கும் ஒருவர், எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர் மீது வழக்குப் போட்டு, அவரை 10 நாட்கள் உள்ளே வைத்து, 11வது நாள் வெளியில் விடும்போது இந்த நிபந்தனையை போட்டு நீங்கள் முதலமைச்சராக தொடரக்கூடாது என்றால், முதலமைச்சர் ஆக முடியாது. மக்கள் செல்வாக்கு மிக்க எந்த ஒரு தலைவரையும் இந்த நிபந்தனையை வைத்து காலம் முழுவதும் அவரை ஜனநாயகத்தின் வளையத்தில் இருந்தே வெளியே தள்ள முடியும். எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா இது?.
ஆளுநர் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் எதையும் மீறவில்லை. விளக்கம் இல்லாமல் இருட்டறையில் இருந்த சட்டப்பிரிவு 200-ஐ, கொஞ்சம் விளக்கமாக எடுத்து படிக்கிறார்கள். அதில் ஆளுநர்களுக்கு மசோதாக்கள் மீது, ஏற்கவோ, நிராகரிக்கவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ 3 விதமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் மசோதாக்கள் மீது எவ்வளவு காலத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்கிற காலக்கெடு இல்லை. உச்சநீதிமன்றத்தின் வேலையே சட்டத்திற்கு வியாக்யானம் வழங்கி, அதனை அமல்படுத்துவதுதான். காலக்கெடுவே இல்லாமல் இருந்த அந்த சட்டத்திற்கு காலக்கெடு நிர்ணயம் செய்தார்கள். தன்கர் எதனால் கோபப்பட்டார். நாங்கள் செய்ய வேண்டிய வேலையை, நீங்கள் செய்யலாமா? இதை உத்தரவாக பிறப்பிக்காமல், ஆலோசனையாக வழங்கினால் நாங்கள் சட்டப்பிரிவு 200ல் திருத்தம் செய்து காலக்கெடு நிர்ணயம் செய்திருப்போமே என்று தன்கர் சொல்லி இருந்தால் சரியாக இருக்கும். ஆனால் அவர் நீங்கள் எப்படி சொல்லலாம் என்று கேட்கிறார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த சட்டத்தையும் மீறவில்லை. சட்டத்தில் தங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பதை புரிந்துகொண்டு மவுனமாக நீதிபதி கடந்து சென்று விட்டார். உத்தரவு போடவில்லை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகக் கூடாது என்று சொல்கிற அதிகாரம் எந்த நீதிமன்றத்திற்கும் கிடையாது. கடந்த முறை செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு வந்த போது இருந்த நீதிமன்றத்தின் பாடி லாங்குவேஜ் என்பதற்கும், இன்றைக்கு அமலாக்கத் துறையின் வாதத்தை முழுமையாக நிராகரித்ததை வைத்து பார்த்தால் நீதிபதிகள் சட்டத்தின் பார்வையை முழுமையாக பார்க்க தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
2026ல் ஸ்டாலின் எங்களின் ஆட்சிதான் என்று சொல்கிறார். அதேசமயம் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனால் அடுத்த 10 மாதங்களில் திமுகவுக்கு பெரிய நெருக்கடிகள் வரும். இன்னும் சோதனைகள் வரலாம். புதிய வழக்குகள் வரலாம். நெருக்கடிகளை சந்திக்க திமுக தயாராகத்தாஎன் உள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைந்தபோதே சொன்னேன். அதிமுகவுக்கு திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதற்கு ஒரு வலுவான ஆயுதம் கிடைத்துவிட்டது. அதிமுக – பாஜக அணி பலமாக அமைந்தால், திமுகவின் கதை கந்தலாகி விடும். நடைமுறை எதார்த்தங்களை புரிந்துகொண்டு அவர்களும் களமாட வேண்டும். 2026 தேர்தல் வெற்றி திமுகவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. ஏனென்றால் அதிமுக அணி பலமாக உள்ளது.
செந்தில் பாலாஜி தப்பு செய்தால், மிக விரைவாக அந்த வழக்கை நடத்தி ஒன்று அவரை தண்டிக்க வேண்டும். அல்லது தவறு இல்லாவிட்டால் விடுவிக்க வேண்டும். அமைச்சராக உள்ளவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் ஆளுரின் அனுமதி அவசியமாகும். விசாரணை அமைப்பின் கோரிக்கைக்கு திருப்தி இருந்தால் ஆளுநர் ஒப்புதல் வழங்குவார். அப்படி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி கே.சி.வீரமணி வரை 6 முன்னாள் அமைச்சர்களின் கோப்புகளை ஆளுநர் ரவி இன்றும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி விஷயத்தை ஏன் தெரியுமா? அரசியல் பழிவாங்கல் என்கிறோம். அவ்வளவு ஆவேசம் கொண்டு சட்டத்தை மீறி ஆவேசத்தை அமலாக்கத்துறையினர் காட்டினார்கள். செந்தில் பாலாஜி வழக்கில் ஆளுநர் அனுமதி பெறவே இல்லை. அந்த வழக்கினுடைய அடிப்படையே ஆடும். அது தொடர்பான தனி வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கருதுகிறேன். அப்போது எல்லோருக்கும் அது புரியும். எப்படி ஒரு அடிப்படை விஷயதை மறந்து, அல்லது மறைத்துவிட்டு ஒருவரை வருடக்கணக்கில் சிறையில் போடுகிற அளவுக்கு அமலாக்கத்துறை வேகம் காட்டினார்கள் என்பது விசாரணையில் எல்லோருக்கும் தெரிய போகிறது.
அன்றைக்கு செந்தில் பாலாஜியின் நோக்கம் முதலில் ஜாமினில் வெளி வர வேண்டும் என்பதுதான். தனி மனிதனின் சுதந்திரத்தை, உடல்நலத்தை பாதுகாப்பது தான் முதல் வேலையாக இருக்கும்.தற்போது வெளியே வந்துவிட்டார் அல்லவா? அடுத்துதான் நீதிமன்றத்தில் வழக்கு போட உள்ளனர். அப்போது, இந்த ஒட்டுமொத்த வழக்கின் விசாரணையும் முழுமையாக தடை செய்யப்படும். ஆளுநரின் அனுமதி கிடைக்கும் வரைக்கும். திமுகவுக்கு எதிரான மனநிலை கொண்டவர் ஆளுநர். அவர் அமலாக்கத்துறை பைல் அனுப்பினால், உடனடியாக ஒப்புதல் வழங்கிவிடுவார்தான். ஆனால் நடைமுறை என்ன என்றால்? அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு முதலில் கடிதம் எழுத வேண்டும். அரசு அதை வாங்கி வைத்துக்கொண்டு பரிசீலனை செய்யும். ஆளுநருக்கு அனுப்பாது. குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடரப்படுகிறது. அதற்கு அனுமதி கோரி கோப்புகளை அனுப்புகிறார். அந்த கடிதம் அதே மோடியிடம் வந்தது. அவர்கள் வழக்கு தொடர்வதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார்கள். அதனால் பொலிடிக்கல் வில் பவர் ஸ்டாலினிடம் இருந்தால், பதிலடி கொடுப்பதற்கு அவரிடமும் பல ஆயுதங்கள் உள்ளன. அந்த ஆயுதங்களை அவர் போய் பார்க்கிறாரா? எடுத்து பரிசோதித்து பார்ப்பாரா? என்று நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.