அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்றைய தினம் ( செப்.5) மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்திருந்தார். ஏற்கனவே இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்து வரும் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவேஅன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இத்தகைய சூழலில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனும் இதே முடிவை எடுக்கலாம் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்தநிலையில், முன்னதாக அறிவித்திருந்தபடி இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் தலைவராக மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர் நல்ல திட்டங்களை இயற்றி இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை நடத்தினார். கோவையில் நடந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதால் எம்.ஜி.ஆர் என்னை மனதாரப் பாராட்டினார். கோபிக்கு பதில் சத்தியமங்கலத்தில் போட்டியிடுமாறு எம்.ஜி.,ஆர் கூறினார். அவருக்கு பிறகு உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார்.
ஆன்மீகவாதிகளும் திராவிட தகைவர்களும் ஏற்றுக்கொண்ட தலைமை ஜெயலலிதா. தன்னை விமர்சித்த தலைவர்களை எல்லாம் அரவணைத்தவர் அவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிற்கு பல்வேறு சோதனைகள் வந்தன. இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதன்பிறகு ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும், தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டுள்ளேன். கடந்த காலத்தில் எனது செயல்பாடுகளை ஜெயலலிதா அவர்களே பாராட்டியது அனைவருக்கும் தெரிந்ததே.
அதிமுக உடைந்துவிடக்கூட்டாது என்பதால் தன் அனைவரும் சேர்ந்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம். இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதாலேயே நான் பல்வேறு தியாகங்களை செய்து இருந்தேன். முன்னாள் முதல்வர் தற்போதைய எதிர்கட்சித் தலைவரை சசிகலா முதலமைச்சராக முன்மொழிந்தார். 2017 ஆட்சியில் அமர்ந்தபிறகு 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களை சந்திக்கும்போது களத்தில் பல்வேறு பிரச்சனை ஏற்பட்டது. 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும். வேலுமணி கூட இதை ஒருமுறை வெளிப்படுத்தினார். அதன்பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம்.
அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் , எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றிபெறும். ” என்று தெரிவித்தார்.