ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பண முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.12 இலட்சம் பெற்று மோசடி செய்த பெண் உட்பட 3 நபர்களை கைது. செய்து மேற்கு மண்டல சைபர் கிரைம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை, நொளம்பூர், ஶ்ரீராம் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌந்தராஜன்(70) என்பவர் 20.08.2025 அன்று அவரது முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஆன்லைன் வழியாக வர்த்தகம் செய்தும், ஸ்டாக் மார்க்கெட்டில் பண முதலீடு செய்து ஸ்டாக்குகளை வாங்கி குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று Nuvama Wealth Group 605 என்ற விளம்பரத்தை பார்த்தும் அதன் கீழே வாட்சப் குழுவிற்கான இணைப்பு (லிங்க்) இருந்ததால், அந்த இணைப்பை கிளிக் செய்து, அந்த வாட்சப் குழுவில் இணைக்கப்பட்டதாகவும், இக்குழுவில் 103 நபர்கள் இருந்த நிலையில், ஆரோயி நம்பூதரி மற்றும் செகய் ஆகியோர் அட்மின்களாக இருந்து Share Stock Trading செய்வதற்கும், பணத்தை முதலீடு செய்வது குறித்து வாட்சப் குழுவில் ஆலோசனைகள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி 30.09.2025 முதல் 22.10.2025 வரை 6 தவணைகளாக மேற்படி நிறுவனம் கூறிய தனியார் வங்கிகளின் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.12 இலட்சம் அனுப்பியதாகவும், ஆனால் அதன் பின்னர் இலாபத்தை தராமல், செலுத்திய பணத்தையும் தராமல் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும், மேற்படி நபர்களை கண்டறிந்து தனது பணத்தை மீட்டு தரும்படியும் செளந்தராஜன் என்பவர் தேசிய சைபர் கிரைம் இணையத்தில் புகார் அளித்து, அதன் ஒப்புகை பெற்று 22.11.2025 அன்று சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின்பேரில், மேற்கு மண்டல இணை ஆணையாளர் வழிகாட்டுதலின்பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் எதிரிகளின் வங்கி கணக்கு பயனாளர்களின் விவரங்களை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரிகள் வளவன் (49), வடபழனி, சென்னை, சுமி(43), சாலிகிராமம், சென்னை, கார்த்திகேயன்(29), கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகிய 3 நபர்களை நேற்று (05.12.2025) திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், 4 வங்கி கணக்கு புத்தகங்கள், 2 காசோலை புத்தகங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் சென்று வந்ததற்கான விமான டிக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் எதிரிகள் வளவன் மற்றும் சுமி ஆகியோர் அறப்பணி ஆன்மீக அறக்கட்டளை என்ற பெயரில் பல வங்கிகளில் கணக்குகளை தொடங்கி, அவற்றை நன்கொடைகள் மற்றும் நிதிகளை வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பெறுவதற்காக, சைபர் கிரிமினல்களுடன் கூட்டு சேரந்து கமிஷன் முறையில் பண பரிவர்த்தனைகளுக்கு எற்ப இவர்களுக்கு பணம் கிடைக்கும் என்ற முறையில் சைபர் கிரிமினல்களை அவர்களது செலவிலேயே ராஜஸ்தான் மற்றும் மும்பைக்கு அழைத்துச் சென்று ஓட்டல்களில் தங்க வைத்து, பண வரிவர்த்தனைகள் செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் எதிரிகள் பயன்படுத்தி வந்த 3 தனியார் வங்கி கணக்குகள் மீது NCRP இணையதளத்தில் இதுவரை 138 புகார்கள் மனுக்கள் இந்தியா முழுவதும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், மற்றொரு எதிரி கார்த்திகேயன் மீது வேப்பேரி, விருகம்பாக்கம், அம்பத்தூர் காவல் நிலையங்களில் சுமார் 7 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (05.12.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், வெளிமாநிலங்களில் பதுங்கியுள்ள இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…


