மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற முயற்றசிதான் காரணம் என்று கூறப்பட்டு வந்த புகார்களுக்கு சிபிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், கட்டாய மதமாற்ற முயற்சி காரணம் அல்ல என்று மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.ஐ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ தனது நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றம் முன்பு தாக்கல் செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி லாவண்யா 2022ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது, கட்டாய மதமாற்ற முயற்சியே தற்கொலைக்கு காரணம் என பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, அப்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் சி.பி.ஐ மேற்கொண்ட விரிவான விசாரணையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவி லாவண்யா பேசியதாக வெளியான எந்தவொரு காணொளியிலும் மதமாற்றம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. மேலும், அவர் பயின்ற பள்ளியில் எந்தவித கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என்றும் சி.பி.ஐ தெளிவுபடுத்தியுள்ளது.
மாணவி தனது வீடியோவில், கன்னியாஸ்திரி சகாயமேரி அளித்த துன்புறுத்தல் மற்றும் அதனால் தனது படிப்பு பாதிக்கப்பட்டது பற்றியே குறிப்பிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், வி.எச்.பி நிர்வாகி முத்துவேல் மற்றும் சில பா.ஜ.க தலைவர்களின் அழுத்தம் காரணமாக, மாணவியின் உடலை பெற ஆரம்பத்தில் பெற்றோர் மறுத்தனர் என்றும், இதனால் அவர்கள் சில காலம் தலைமறைவாக இருந்ததாகவும் சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை மறைக்காமல் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட முத்துவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பள்ளியின் முன்னாள் மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும், யாரும் மதமாற்றம் செய்யப்பட்டதாக ஆதாரம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம், நீண்ட நாட்களாக நீடித்து வந்த மதமாற்ற குற்றச்சாட்டுகளுக்கு சி.பி.ஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


