சென்னை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கணவர் மற்றும் மகளை இழந்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (61), கடந்த 2023ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி தனது மனைவி ஜோதிகா (49) மற்றும் மகள் ஷோபிகா (26) ஆகியோருடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் இருந்து காரில் சென்னை நோக்கி பயணம் செய்தார். அப்போது இருங்காட்டுக்கோட்டை சிப்காட் அருகே வந்தபோது, அதே பாதையில் வந்த ஐச்சர் சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பாஸ்கரும், அவரது மகள் ஷோபிகாவும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். ஜோதிகா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
இதையடுத்து, தனது கணவர் உயிரிழப்புக்கு ரூ.1.78 கோடி, மகள் உயிரிழப்புக்கு ரூ.49 லட்சம் மற்றும் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி ஜோதிகா சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி ஏ. நசீர் அகமது விசாரித்தார். வழக்குகளை ஒன்றாக விசாரித்த நீதிபதி, “விபத்துக்கு லாரி டிரைவரின் அலட்சியமும் கவனக்குறைவுமே முக்கிய காரணம். பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிப்பது இயல்பானது என்பதால், அதிவேகத்தை மட்டும் காரணமாகக் கூறும் காப்பீட்டு நிறுவனத்தின் வாதம் ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.
மேலும், விபத்தில் ஜோதிகாவுக்கு 34 சதவீத உடல் ஊனம் ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ரூ.13.58 லட்சம், கணவர் உயிரிழப்புக்கு ரூ.17.24 லட்சம் மற்றும் மருத்துவராக பணியாற்றிய மகள் ஷோபிகா உயிரிழப்புக்கு ரூ.1.29 கோடி என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் சோழமண்டலம் எம்.எஸ். ஜெனரல் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
