சென்னையில் சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி ஆகிய இடங்களில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடுகளில் இன்று (ஜூலை 17) காலை 07.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

இன்று பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சோதனை நடைபெறும் வீட்டில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் அலுவலகம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சண்முகபுர காலனியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் உள்ள அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கௌதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரூபாய் 8.6 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்த நிலையில், சோதனையானது நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்த தி.மு.க. நிர்வாகிகள் சோதனை நடைபெறும் அமைச்சர் பொன்முடியின் இல்லங்கள் முன்பு குவிந்து வருகின்றனர். அதேபோல், தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் பெங்களூருவுக்கு புறப்படவிருக்கும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை வளையத்திற்குள் வந்த இரண்டாவது அமைச்சர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!
கடந்த ஜூன் 13- ஆம் தேதி அன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகள், அவரது அலுவலகங்கள் மற்றும் அமைச்சரின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார்.