- Advertisement -
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.
4,000- க்கும் மேற்பட்ட காளைகள் ஆன்லைனில் பதிவுச் செய்திருந்த நிலையில், 1,200 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பில் 2 கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இருசக்கர வாகனம், தங்கம், வெள்ளி காசு, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. தலைமையில் 2,000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தின் இருபுறமும் 2 கி.மீ., இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் பாதுகாப்பாக அமர்ந்து ஜல்லிக்கட்டைப் பார்க்க பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் 2- ஆம் சுற்று தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2- ஆம் சுற்றில் பிங்க் நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டு வருகிறார்.