சென்னையில் இளம்பெண் அளித்த பாலியல் புகாரில் சினிமா தயாரிப்பாளர் கைது
தனது தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கருக்கலைப்பு செய்ததுடன், 5 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (30). சினிமா தயாரிப்பாளரான இவர், கீழ் அயனம்பாக்கத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரி (28) (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் லிங்கேஸ்வரி கடந்த மே மாதம் 13 ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கெடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும், அதனால் தான் கர்ப்பம் அடைந்த நிலையில், சத்து மாத்திரைகள் என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவினை கலைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடன் தனிமையில் இருந்தபோது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும், 5 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதா,சினிமா தயாரிப்பாளரான முகம்மது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆதார் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.