எர்ணாவூரில் கண்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்து விழுந்ததில் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மதுரையை சேர்ந்தவர் இளஞ்செழியன் (39). மணலி புதுநகரில் தங்கி கண்டெய்னர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், இன்று அதிகாலை வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் வந்த 40 அடி நீளம் கொண்ட கண்டெய்னரை டிரெயிலர் லாரியில் ஏற்றிக் கொண்டு, மணலி புதுநகரில் உள்ள சரக்கு பெட்டகத்திற்கு புறப்பட்டு சென்றாா். எண்ணூர் விரைவு சாலையில் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் சந்திப்பு வளைவில் திரும்பிய போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைக்குப்புற சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவா் இளஞ்செழியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து டிரைவா் இளஞ்செழியனை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் லாரியும், கண்டெய்னர் பெட்டியும் சாலை குறுக்கே கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பொிதும் பாதிப்புக்குள்ளாயினா். இதனையடுத்து ராட்சத பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, கவிழ்ந்து கிடந்த லாரியையும், கண்டெய்னர் பெட்டியும் தூக்கி ஓரமாக நிறுத்தினர். 3 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து பால்பண்ணை போக்குவரத்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரத்துக்கு மேலாகவும் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.