என்.எல்.சி விளம்பரத்தை அரசே வெளியிட்டது தவறு – அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சியின் விளம்பர முகவரா கடலூர் ஆட்சியர்? மக்கள் வரிப்பணத்தில் என்.எல்.சிக்கு நாளிதழ் விளம்பரமா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலப்பறிப்பு சர்ச்சை தொடர்பான என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, மக்கள் தொடர்பு அலுவலரே நாளிதழ் விளம்பரமாக (RO No.56/IPRO/Cuddalore/2023) வெளியிட்டிருக்கிறார். என்.எல்.சியின் விளம்பரத்தை அரசே வெளியிட்டது தவறு; கண்டிக்கத்தக்கது. என்.எல்.சியின் விளம்பரத்தில் உண்மை இல்லை. என்.எல்.சியின் போக்கில் மாற்றமும் இல்லை. மக்களை மதிக்காத என்.எல்.சிக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாகத் தான் மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும். ஆனால், மக்கள்விரோத நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தருவது நியாயமற்றது.
நிலப்பறிப்பு சர்ச்சை தொடர்பான என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, மக்கள் தொடர்பு அலுவலரே நாளிதழ் விளம்பரமாக (RO No.56/IPRO/Cuddalore/2023) வெளியிட்டிருக்கிறார். என்.எல்.சியின் விளம்பரத்தை அரசே வெளியிட்டது தவறு; கண்டிக்கத்தக்கது!(1/5)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 20, 2023
என்.எல்.சியின் விளக்கத்தை அது தான் விளம்பரமாக அளித்திருக்க வேண்டும். அந்த நிறுவனத்திற்கென மக்கள்தொடர்பு பிரிவு இருக்கும் நிலையில், மாவட்ட மக்கள்தொடர்பு அலுவலர் மூலம் மக்கள்வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிடச் செய்ய கடலூர் ஆட்சியர் என்.எல்.சியின் விளம்பர முகவர் அல்ல. தில்லி அரசு விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததற்காக அம்மாநிலத்தின் ஆளும் கட்சியிடமிருந்து ரூ.163.62 கோடியை வசூலிக்க தில்லி அரசின் குழு ஆணையிட்டது. என்.எல்.சி விவகாரத்திலும் அது தான் நடந்துள்ளது; தில்லி நடவடிக்கை கடலூருக்கும் பொருந்தும். என்.எல்.சிக்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட மக்களின் வரிப்பணத்தை கடலூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.