2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஓரளவு திமுக – அதிமுக இடையிலான போட்டி என உறுதியாகிவிட்டதாகவும், அதனால் 2031 தேர்தலை நோக்கி ஒரு அஜெண்டா நகர்வதாகவும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழ் தேசியத்திற்கான இடம் குறித்தும், புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அடுத்த செய்ய வேண்டியவை குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜெகத் கஸ்பர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- அனைத்து விடுதலைப் போராட்டங்களும் முடிவுக்கு வருகிறபோது, சுயநல கும்பல் ஒன்று உருவாகும். இத்தாலியில் நேப்பிள்ஸ் விடுதலைப் போராட்டம் தோற்றபோது, இத்தாலியன் மாஃபியா என்ற கும்பல் உருவானது. அதுபோல விடுதலைப்புலிகள் போராட்டம் முடிவுக்கு வந்தபோது, ஒரு சுயநல கும்பல் உருவாகிறது. இலங்கை உளவுத்துறை, இந்திய உளவுத்துறையினரை 2வதாக வைக்கலாம். இதற்குள் எங்காவது எங்களுக்கான அரசியலை கட்டி எழுப்ப முடியுமா என்று முயற்சிக்கிற சக்திகளும் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்கின்ற கலவைதான் இன்று நடக்கிற குழப்பங்களுக்கு காரணம். இதில் இருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால், ஒரு மனம் திறந்த வெளிப்படையான உரையாடல் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் நிகழ வேண்டும்.
எது உண்மை, எது பொய்யாக இருக்கக்கூடும்?. 15 ஆண்டுகள் சொல்லப்பட்டது எல்லாம் இன்று பொய்கள் என நிரூபணம் ஆகியுள்ளது. நாம் என்ன செய்ய வேண்டும்?. போரினால் காயமுற்ற போராளிகளுக்கு, பொதுமக்களுக்கு, 70 ஆயிரம் கைம் பெண்களுக்கு அவர்களது வாழ்வை மீட்டெடுப்பது. பொருளாதாரம், கல்வி, தமிழ் மொழியை மீட்டெடுப்பது. அடுத்த தலைமுறையை கட்டி எழுப்பி ஒரு 25 ஆண்டுகள் பாடுபட்டால் மட்டும்தான் அந்த மக்கள் ஓரளவுக்கு கவுரவமாக வாழ்கின்ற சமுதாயமாக நிற்க முடியும்.
அதற்கான செயல்த் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக பேசுவதுதான் இன்று இலங்கை தமிழ் மக்கள் செய்ய வேண்டியது. அதனை அவர்கள் தான் செய்ய வேண்டும். அந்த உரையாடலுக்கு தமிழகம் துணை நிற்க வேண்டும். தமிழ்நாடு இனி ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு துணை நிற்க முடியாது. இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு இனி வய்ப்பு இல்லை. இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு இந்தியா துணை நிற்க வேண்டும். அப்படி என்றால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் பேசி, குறைந்தபட்ச ஒரு பொது கருத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த மக்களுக்கு ஒரு அரசியல் பிரிவு வேண்டும், பொருளாதார மீள்கட்டுமானம் துரிதப்படுத்தப்பட வேண்டும். கல்வி, மொழி, கலைப் பண்பாட்டு முயற்சிகள் இன்னும் துரிதப்படுத்த வேண்டும். வடகிழக்கு இலங்கையில் சீனர்கள் மற்றும் மார்வாடிகள், குஜராத்திகளின் முதலீடுகள்தான் அதிகமாக உள்ளது. ஏன் உலகம் முழுவதும் இன்று ஈழத் தமிழர்கள் வசதியாக இல்லையா? அவர்கள் சென்றால் துரோகிகள், சிங்கள கைக்கூலிகள் என்கிறார்கள். உங்கள் நிலப்பரப்பில் உங்கள் இனம் சார்ந்தவர்களின் ஆளுகையின் கீழ் வைத்திருப்பதுதான் ஆக்கப்பூர்வமான செயலாக அமையும்.
தமிழ்நாட்டு அரசியலை ஆழ்ந்து கவனித்து வருகிறேன். பொதுவெளியில் அடிப்படை உண்மை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாது. விஜயகாந்தின் மரணத்தின்போது அவ்வளவு மக்கள் ஏன் திரள்கிறார்கள் என்றால், ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்தின் உண்மையை மக்கள் தரிசித்திருக்கிறார்கள். உண்மையை நீங்கள் தரிசிக்க வில்லை என்றால் மக்கள் அப்படி எல்லாம் வர மாட்டார்கள். இன்று தேவாலயத்திற்கு இத்தனை பேர் வருகிறார்க என்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவை சுமந்த யேசுவுக்காக தான் வருகிறார்கள். பாதிரியார் ஆகிய எனக்காக அவர்கள் வரவில்லை. அவர்கள் என்னை பார்க்க வருகிறார்கள் என்று நினைத்தால் என்னை போன்று ஒரு முட்டாள் இருக்க முடியாது. தமிழுக்கு ஒரு வலிமை இருக்கிறது. தமிழ் உணர்ச்சியால் உந்தப்பட்ட இளைஞர்கள் தான் சீமானிடம் வருகிறார்கள். நாளை உண்மையிலேயே தமிழுக்கு தொண்டு செய்கிற 100 பேர் ஒன்று கூட நல்ல தமிழ் தேசியத்தை கட்டி எழுப்பினால் அவர்கள் பின்னால் வருவார்கள்.

இந்த இடத்தில் இருந்து எப்படி போகும் என்று நினைக்கிறேன் என்றால், 2031ல் எப்படி அரசியல் களம் மாறும் என்பதை பொருத்துதான். 2026ல் ஓரளவு செட்டில் ஆகிவிட்டது. திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி. அரசியலில் நீங்கள் 5 சதவீதம் வாக்குகளை வைத்திருந்தாலே பெரிய வியாபாரம். நான் கட்சி பெயரை சொல்ல விரும்பவில்லை. அந்த கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, ஒரு கூட்டணியுடன் கூட்டணி வைக்காமல் இருக்க ரூ.500 கோடி வாங்கியது. மற்றொரு அணியோடு கூட்டணி வைப்பதற்கு ரூ.300 கோடி வாங்கியது. அந்த கட்சி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.800 கோடி வாங்குகிறது. இதனால்தான் தேர்தல் அரசியலுக்குள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை கொண்டுவந்து நிறுத்தாதீர்கள் என்கிறோம். ஆனால் இங்கு தமிழ் தேசியத்திற்கு என்று ஒரு தளம் உள்ளது. பெரும்பாலும் இன்று அரசியல் செல்கிற போக்கை பார்த்தால் ஒருகாலத்தில் பார்ப்பனிய உயர்சாதி அரசியல், திராவிட அரசியல் என களம் கட்டமைக்கப்பட்டது. இன்று திமுக, அண்ணா திமுக ஆகிய திராவிட கட்சிகள் தங்களை கொள்கை ரீதியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் தமிழ்த் தேசியம், திராவிடம் என்பதாக வந்து நின்றுவிடும். அதை யார் எப்படி கையாள போகிறார்கள் என்பது இன்னும் 2 ஆண்டுகளில் தெரிந்துவிடும். சீமானுக்கு அந்த அஜெண்டா உள்ளது.
வைகோ திமுகவில் இருந்து வெளியேறியபோது, லட்சக்கணக்கானோர் அவர் பின்னால் சென்றார்கள். ஆனால் இன்று அவர்கள் எங்கே போனார்கள். தங்களுக்கும் பயன்படாமல், தமிழ் இனத்திற்கும் பயன்படாமல் ஒன்றுமில்லாமல் போனார்கள். கலைஞரும், அண்ணாவும் அழைத்தபோது கோடிக்கணக்கான இளைஞர்கள் வந்தார்கள். வைகோ அழைத்தபோது லட்சக்கணக்கானோர் வந்தனர். இன்று லட்சக்கணக்கில் வருவதற்கு இல்லை. இன்று சீமான் செய்யும் வேலையால், தமிழ் தேசியம் என்று பேசுகிறவர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். சீமானை நம்பி 15 வருடங்களாக ஏமாந்துவிட்டனர். வாழ்க்கையை இழந்து, தொழிலை இழந்துவிட்டனர். அவர்கள் இனி வருபவர்களை எச்சரித்து வெளியே அனுப்புவார்கள். தமிழ்தேசிய என்ற யார் பேசினாலும் அவநம்பிக்கையோடும், ஐயத்தோடும் பார்க்கும் நிலைதான் வரும். தேர்தலில் 5 சதவீத வாக்குகள் வாங்கியதால் இவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர் என்று சொல்லாதீர்கள்.
இலங்கை தமிழர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இந்த போராட்டமும், தியாமும் இல்லை என்றால் புலம்பெயர் நாடுகளில் நீங்கள் இவ்வளவு வசதியாக இருக்க முடியாது. இந்த வாழ்வு உங்களுக்கு கிடைப்பதற்கு நிறைய விலை கொடுத்திருக்கிறீர்கள்தான். எனவே இன்றைக்கு நீங்கள் கவனப்படுத்த வேண்டியது தமிழக அரசியலில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழகம் ஏறக்குறைய 8 கோடி தமிழர்களின் நிலப்பரப்பு. இதன் உள் அரசியலில் தலையிட்டதால்தான் புலிகள் இயக்கம் கூட பல சிக்கல்களை சந்தித்தது. திமுக – அதிமுக என்ற இரு துருவ அரசியலில் புலிகள் சிக்கிக்கொண்டது. அதிமுக ஆட்சியில் இருந்தது எம்ஜிஆர் பெரும் பணமும், வசதிகளை செய்து கொடுத்தார். எனவே திமுகவோடு ஓரு முரண்படும் நிலையை புலிகள் வளர்த்துக்கொண்டது. அந்த தவறை என்றும் செய்யாதீர்கள்.
வெளியில் இருந்துகொண்டு நீங்கள் முதலில் செய்வது உங்கள் விடுதலைக்காக தன் குடும்பத்தையும், தன்னையும் இழந்த உங்கள் தலைவருக்கு தலை வணங்குங்கள். எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் இன்னுயுரை தியாகம் செய்த போராளிகளை வணங்குங்கள். எஞ்சி இருக்கிற ஊனமுற்ற, தங்கள் வாழ்வை இழந்த போராளிகள், பொதுமக்களை கட்டி எழுப்புகிற வேலையை பாருங்கள். அங்குள்ள ஒரு குழந்தைகூட படிக்கவில்லை என்ற நிலையை ஏற்படுத்தும் விதமாக அவர்களது கல்வியில் முதலீடு செய்யுங்கள். 70 ஆயிரம் கைம்பெண்களை வாழ்வில் உயர்நிலைக்கு கொண்டுவாருங்கள். அப்படி ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்யுங்கள். உங்கள் இரண்டாம் தலைமுறையை உலக நாடுகளின் அரசியல் அதிகாரத்தோடு சென்று இலங்கை தமிழர்களின் கோரிக்கைக்காக உரையாடும் ஒரு பெரும் அணியை உருவாக்குங்கள். அழித் தொழிக்கப்பட்ட ஜேவிபி இன்று ஆட்சி அதிகாரத்தில் கம்பீரமாக இருக்கிறார்கள் அல்லவா, அதுபோல நமக்கும் ஒரு காலம் வரும், எனது காலத்திலேயே அந்த தீர்வுகள் வராது. ஆனால் என்னளவில் நான் செய்ய வேண்டிய வேலையை 100 சதவீதம் செய்வேன் என்று ஒவ்வொரு ஈழத் தமிழரும் செய்வார்கள் என்றால் 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம் வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.