நடிகை பாலியல் புகார் விவகாரத்தில் அரசியல் ரீதியாக சீமானை திமுக வளர்த்து விடுகிறது என்பது ஏற்புடையதல்ல என்றும், தனக்கு எதிரான வாக்கு வங்கியை பல முனைகளாக பிளவுப்படுத்துவது திமுகவுக்கு லாபம்தான் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரில் சீமானின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: சீமான் மீது பாலியல் புகார்கள் வரும்போது அவர் பெண் நிர்வாகிகள் புடைசூழ செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி செய்யும்போது மக்களின் அனுதாபம் தனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறார். ஆனால் மக்கள் அப்படி பார்ப்பது இல்லை. என்னை பொருத்தவரை நடிகை பாலியல் விவகாரத்தை சீமான் தவறான முறையில் கையாளுகிறார். இது ஒரு அரசியல் தலைவருக்கு சரியானது அல்ல. இந்த விவகாரத்தில் சீமானை அவசியம் இன்றி திமுக வளர்த்து விடுகிறது என விமர்சனம் உள்ளது. ஒரு அரசியல் கட்சி, எதிரிகள் மீது புகார் வருகிறபோது, அதனை பெரிதுபடுத்துவது இயல்பானது ஆகும். பிழையே செய்யாதவர்கள் தலைவர்கள் கிடையாது. அந்த பிழையையே தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று அழகாக கணக்கிட வேண்டும். சீமான் அதை பயன்படுத்தினால் தான் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும்.
எதார்த்தமாக அரசியல் செய்வீர்களா? அல்லது இதேபோல் விவாதித்துக் கொண்டே இருக்க முடியுமா?. நடிகை பாலியல் விவகாரத்தில் யாருமே சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை பாருங்கள். அனைத்து விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் அண்ணாமலையே, இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் அப்படி சொன்னால் தேர்தல் நேரத்தில் நமக்கு எதிராக எதாவது கிளப்புவார்கள் என்ற அச்சம் கூட அண்ணமலைக்கு இருக்கலாம். பொதுவாக இதுபோன்ற விவகாரத்தில் அனைவரும் தள்ளி நிற்கத்தான் பார்ப்பார்கள்.
நாம் தமிழர் கட்சியினர் வழக்கை எதிர்கொண்டு எதிர்கொண்டுதான் வளர்கிறது என்று அக்கட்சியின் நிர்வாகிகள் சொல்கின்றனர். ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு, எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக வரும்போது. தோற்கடிக்கப்பட்ட கட்சியின் மீது சொத்துக்குவிப்பு வழக்கு, இல்லாவிட்டால் லஞ்ச ஊழல் வழக்குத்தான் போடுவார்கள். சில நேரங்களில் பெரிய கூட்டத்தை கூட்டும்போது ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றிருக்கும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கூட அப்படி ஒரு வழக்கு உள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தார் இதுபோன்ற வழக்குகள் தான் வரும். ஆனால் இதுபோன்று பாலியல் வழக்குகள் மிகவும் அரிதாகத்தான் வரும். இந்த வழக்கினுடைய மூலம் என்பது நடிகை அளித்த புகார்தான். விஜயலட்சுமி புகாரே அளிக்கவில்லை என்றால், வழக்கே வந்திருக்காது அல்லவா? பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த வழக்கை தொடர முடியும்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கான வழிகள் என்றால் காவல்துறை அனுமதி வழங்க மாட்டார்கள். நீதிமன்றத்திற்கு சென்றுதான் அனுமதி வாங்க வேண்டும். ஒரு ஊர்வலத்திற்கு காவல்துறை பாதுகாப்பு தரப்படாது. இதுதான் நடைபெறும். ஆனால் ஒரு ஆத்திரப்பட்ட நபர் அளிக்கும் புகாரை ஆளுங்கட்சி பெரிதுபடுத்துவதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு. ஏனென்றால் ஆத்திரப்பட்ட நபர் எப்போது வேண்டும் என்றாலும், தங்கள் நிலையில் இருந்து பின்வாங்கி விடுவார்கள். அப்போது ஆளுங்கட்சி அவமானப்பட வேண்டி வரும். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது. இன்று 4 வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த வழக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நிலுவையில் உள்ளது. எப்படி இந்த வழக்கு உயிர்பெற்று இவ்வளவு தூரம் பெரிதாக வந்தது என்றால், அதற்கு காரணம் சீமான் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால்தான் வந்தது.
அரசியல் ரீதியாக சீமானை திமுக வளர்த்து விடுகிறது என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. திமுகவுக்கு எது லாபம் என்றால்? தனக்கு எதிரான வாக்கு வங்கியை பல முனைகளாக பிளவுப்படுத்துவது தான் லாபமாகும். அது எந்த கட்சிக்கும் பொருந்தும். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மக்கள்நலக் கூட்டணியை உருவாக்கவில்லையா? 2014ல் குன்கா வழங்கிய தீர்ப்பால் ஜெயலலிதா மீது மிகப்பெரிய அதிருப்தி இருந்தது. அதனை அவர் தனக்கு எதிரான வாக்கு வங்கியை பிளவு படுத்துவதன் மூலம் வெற்றிகரமாக எதிர் கொண்டார். 1962ஆம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் தமிழ்நாட்டில் எந்த மாதிரியான உத்தியை கடைபிடித்தது. 1967ல் அதை தாண்டி தானே அண்ணாவின் கூட்டணி வந்தது. அண்ணாவே அதை சொல்கிறார். இந்த முறை வலையை சரியாக பின்னி இருக்கிறேன். திமிங்கலம் மாட்டிக்கொள்ளும் என்று சொன்னார். 1957ல் கூட்டணி இல்லாமல் 15 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. எனக்கு தெரிந்த நாம் தமிழர் கட்சியே, 1957ல் இருந்த சி.பா.ஆதித்தனார் நாம் தமிழர் கட்சிதான். எங்கள் ஊர் எம்எல்ஏ அவர்தான்.
சீமான் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றபோது, வீரப்பன் மகள் அழுத விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றால் இல்லை. அப்படி இருந்தால் வீரப்பன் ஆதரவு பெற்றவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்கள் அல்லவா? சீமானுக்கு தினம் தினம் முக்கியத்துவம் கிடைப்பதை பார்த்தால் அண்ணாமலை, விஜய்க்குதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். அடடா இந்த செய்திகளில் நாம் இருந்தோமே என்று. வேண்டுமானால் பாருங்கள் நாளையோ நாளை மறுநாளோ அண்ணாமலை வந்து இந்த விவகாரத்தை திசை திருப்புவார். அல்லது செய்தி சுழற்சிக்குள்ள தான் வந்து சேர்ந்துகொள்ள ஏதாவது ஒரு பெரிய விஷயத்தை எடுத்து அடிப்பார். பொது மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. இதை எல்லாம் கடந்து இந்த செய்திகளை எல்லாம் ஒரு கூத்தாகத்தான் அவர்கள் நினைப்பார்கள். அப்படி இருக்கும்போது பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.