இந்தி திணிப்பு விவகாரத்தில் பாடம் கற்றுக்கொண்ட பிறகும் மத்திய பாஜக அரசு, சென்சார் சான்றிதழ் மூலம் பழைய தவறுகளையே செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


பராசக்தி படத்தில் வெட்டப்பட்ட அண்ணா குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியாகி உள்ளது. மத்திய தணிக்கை வாரியம் படத்தில் 25 இடங்களில் கட் செய்துள்ளனர். படத்தில் அண்ணா பேசிய வசனம் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. தீ பரவட்டும் என்கிற வாசனம் நீதி பரவட்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. தீ பரவட்டும் என்பது 1940களில் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். அதை இயற்றியவன் அண்ணாதுரை என்று இருக்கும். சென்னை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சொற்போரில் அண்ணா, ரா.பி. சேதுப்பிள்ளை, ஈழத்தடிகள் உள்பட 4 பேர் கலந்துகொண்டனர்.
அவர்கள் நால்வரின் பேச்சுக்கள் அடங்கிய மற்றும் தலைமை உரை அடங்கிய தொகுப்பு நூல் தீ பரவட்டும் ஆகும். கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது தான் அதன் சப்ஜெக்ட் ஆகும். இந்த நூல் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இன்றைக்கு இணையதளத்திலும் கிடைக்கிறது. இன்றைக்கு மீண்டும் தீ பரவட்டும் நூல் குறித்து பேசுவது வரவேற்கத்தக்கது. சென்சார்போர்டு அல்லது மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு செய்துள்ள நன்மைகளில் இது ஒன்று.

தமிழ்நாடு சினிமா ஸ்டார்களின் பின்னால் போகிற மாநிலம் என்பது தவறான வாதம். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் அதை விளக்கி ஒரு தலையங்கம் எழுதிவிட்டார்கள். தமிழ்நாடு சினிமா ஸ்டார்களை தனது அரசியல் சிந்தனைகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. திரைமொழி மூலமாக நாம் சித்தாந்தத்தை வளர்த்துள்ளோம். நாடகம் மூலமாக வளர்த்துள்ளோம். இதுதான் நமது அரசியல் வரலாறு. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இரு மொழிக்கொள்கையும் முக்கியமானது. அதை வைத்துதான் இந்த அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதை எளிய மக்களுக்கு விளக்க பயன்பட்டது ஒரு காலத்தில் நாடகங்கள். அதற்கு பிறகு சினிமா. சென்சார் மட்டுமே எல்லாவற்றையும் மாற்றி அமைத்துவிடும் என்பது பைத்தியக்காரத்தனம்.
பராசக்தி படத்தில் அண்ணாவின் இரு மொழி கொள்கை தொடர்பான காட்சியை சென்சார் போர்டு கட் செய்ததாக தெரிகிறது. படக்குழுவினர் அதை இணையத்தில் வெளியிட்ட நிலையில், அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை நான் முன்பே சொல்லிவிட்டேன். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்த நேரத்தில் சென்சார் என்பது பத்தாம் பசலித்தனமானது. மொழிப்போர் என்பது நடந்த வரலாறு. அதை மாற்றுவது என்பது டெல்லியின் ஆதிக்க மனப்பாண்மை என்பதை காட்டுகிறது. டெல்லிதான் இந்தியா என்று நினைக்கிறார்கள். அதை தாண்டியும் இந்தியா உள்ளது.

1965 ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டம் மட்டும் முக்கியமானது அல்ல. பல நிகழ்வுகள் சேர்ந்துதான் அந்த போராட்டத்திற்கு வழிவகுத்தது. மதுரையில் ஒருநாள் முன்னதாகவே 25ஆம் தேதி இந்தியை எதிர்த்து அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். அந்த போராட்டத்தால் பலரது வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரையில் 25ஆம் தேதி கோயிலை சுற்றி மாணவர்கள் ஊர்வலம் போனார்கள். அப்போது காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தவர்கள் இறங்கி வந்து அடித்தார்கள். அது பெரிய மோதலாக மாறியது. இதனால் மாணவர்கள் காங்கிரஸ் கொடியை தீவைத்து எரித்தனர். அந்த காலத்தில் தினத்தந்தி நாளிதழ் தான் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக செய்தி வெளிட்டனர்.
அண்ணா ஆட்சிக்கு வந்து, இருமொழி கொள்கை தீர்மானம் போட்டு நிறைவேற்றினார். அதன் பிறகும் இந்தி கட்டாயம் என்று சுற்றறிக்கை வெளியிட்டனர். இந்தி மொழிப் படிப்பவர்களுக்கு 750 ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதை எதிர்த்து கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் தனித்தமிழ்நாடு கொடியை ஏற்றினார்கள். பின்னர் அண்ணா மத்திய அரசிடம் பேசி அந்த திட்டத்தை ரத்து செய்தார்.

பராசக்தி சென்சார் பிரச்சினை மூலமாக மீண்டும் டெல்லி நமக்கு சொல்வது, ஆதிக்க மனநிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். தற்போது பாஜக உள்ளது அவ்வளவுதான் வித்தியாசம். மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்களும் உயிரிழந்தார்கள். காவலர்கள், ஆயுதப்படை வீரர்களும் உயிரிழந்தனர். திமுக தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டனர். கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் இருந்தனர். மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் யார் என்பது ரகசியமாக இருந்தது. 1967க்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று அண்ணா ஏபிஆர்ஓ என்கிற பணியை உருவாக்கினார். எல்.கணேசன், நடராஜன் போன்றவர்கள் ஏபிஆர்ஓ ஆகினர். மாணவர்கள் போராட்டத்தின்போது எம்ஜிஆர் கோவா சென்றுவிட்டார்.
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக சென்றார். அதனால் அவருடைய படத்தை மாணவர்கள் புறக்கணித்தோம். அதனால் படம் சரியாக போகவில்லை. பின்னர் அந்த தவறை எம்ஜிஆர் திருத்திக் கொண்டார். ஆனால் மோடி அரசு பழைய தவறுகளை மீண்டும் புதிதாக செய்கிறார்கள். அதற்கு பெரிய உதாரணம் பராசக்தி, ஜனநாயகன் பட சென்சார் விவகாரம். சென்சாரை ஆயுதமாக பயன்படுத்துகிற மத்திய அரசு என்கிற குற்றச்சாட்டை அன்றைக்கு வைத்தோம். இன்றைக்கும் வைக்கிறோம். அதை முதலமைச்சரும் அந்த குற்றச்சாட்டை வைக்கிறார்.

மாணவர்கள் போராட்டம் காரணமாக அன்றைய முதலமைச்சர் காமராஜர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தேர்தலில் தோல்வி அடைந்தனர். காமராஜர் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியுற்றார். விருதுநகர் தொகுதியில் சீனிவாசனுக்கு ஆதரவாக மாணவர்கள் தேர்தல் வேலை பார்த்தோம். அதே நேரம் 1969ல் காமராஜருக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் வேலை பார்த்தோம். துணை சபாநாயகராக சீனிவாசன் இருந்தபோது அவருடைய செயல்பாடுகள் அதிருப்தியை அளித்தன. காமராஜர் காங்கிரஸ் தேசிய தலைவராகிவிட்டார். ஆனால் விருதுநகரில் எம்எல்ஏ தேர்தலில் நின்றார். அதன் பிறகு நாகர்கோவில் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தலைவர்கள் தவறு செய்வார்கள் என்பதற்கு இதுவும் உதாரணமாகும். காமராஜர், எம்ஜிஆர், கலைஞர் என யாராக இருந்தாலும் இது பொருந்தும்.
தவறை திருத்திக்கொள்ள வேண்டும். காமராஜர் திருத்திக் கொண்டார். அவர் பெருந்தலைவர் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. போராட்ட உணர்வு, பராசக்தி படத்தில் காண்பித்துள்ள மொழிப்போர் தற்போதும் மும்பையில் உள்ளது. மராத்தி மொழியை இந்தி ஆதிக்கம் செலுத்துவதாக போராட்டம் நடத்தினார்கள். அதனால் மகாராஷ்டிரா அரசு பின்வாங்கியது. எனவே தவறு செய்தால் அதை தலைவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் பராசக்தி உணர்த்தும் பாடமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


