திருப்பரங்குன்றம் கோவிலின் வரலாறு குறித்து மதுரை மக்களுக்கு நன்றாகம் தெரியும், அவர்களுக்கு ஹெச்.ராஜா போன்றோர் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் மலை விவகாரத்தில் பாஜக, இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகளின் சதி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பெரும் பகுதிகள் மத நல்லிணக்கம் நிறைந்த பகுதிகளாகும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் அனைவரும் செல்வார்கள். தமிழ்நாட்டில் நாகூர் தர்கா வழிபாடு செய்யாதவர்களே இருக்க முடியாது. தர்கா வழிபாடு என்பது இறைநேர்களை வழிபடுவதாகும். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கடவுள் நேசர்களாக இருக்கலாம். இந்த நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள் தான் சிறுபான்மையினர் என சுப வீரபாண்டியன் சொல்வார். அது உண்மைதான். நான் தொடக்கப்பள்ளி பயின்றது ஒரு இஸ்லாமிய பள்ளி. ஒரு இஸ்லாமிய தனவந்தனர், கிராமத்து மக்களுக்காக தனது சொத்துக்களை எழுதி வைத்தார். பின்னர் அந்த சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சென்றது. வக்பு என்பது எந்த ஒரு இஸ்லாமியரும் தனது சொத்துக்களை தானமாக வழங்குவதாகும். வக்புகளை நிர்வாகிக்கும் அமைப்புதான் வக்பு வாரியம். ஒரு வகையில் குறிப்பிட்ட மதம் சார்ந்த அறக்கட்டளையை அரசு நிர்வகிப்பதற்கு சமம்தான் அது. வேறு மதங்களில் அப்படி கிடையாது. இதுபோன்ற மத வேறுபாடுகள் முன்பெல்லாம் கிடையாது. இப்போது திருப்பரங்குன்றம் போன்ற சின்ன ஊரிலும் வந்துவிட்டது. இப்போது அதற்குள் அரசியல் புகுந்துவிட்டது மிகவும் ஆபத்தான விஷயமாகும்.
திருப்பரங்குன்றம் ஒரு சமண வழிபாட்டு தலமும் ஆகும். இதுவே திருப்பங்குன்ற கோவிலுக்கு சுப்பிரமணிய சுவாமி என்பது வடமொழி பெயர், முருகன் என்ற தமிழ் பெயரில் அழைக்க வேண்டும் என பல வருடங்களாக இயக்கம் நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் ஒரு சமண வழிபாட்டுத்தலமும் ஆகும். இது தொடர்பான எனது சமண நூல் ஒன்றை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் அரிட்டாபட்டி பற்றியும், மதுரையில் இருந்த சமண வழிபாடுகள் பற்றியும், மதுரையில் இருந்த 8 குன்றுகள் பற்றியும் அதில் சொல்லியிருப்பேன். அனைத்து மதங்களையும் நேசிப்பது தான் நமது வாழ்க்கை முறையே. அதற்குள் அரசியல் புகுந்ததே கிடையாது. துரதிர்ஷ்டவசமாக அதற்குள்ளாக அரசியலை கொண்டுவந்து திணிப்பதால் தேவையற்ற பீதியை ஏற்படுத்துகிறார்கள். ஒரு வகையில் இது நல்லதோ என்று தோன்றுகிறது. இந்த ஆபத்தை இப்போது மதுரையில் உள்ள மக்கள் உணர்வார்கள். திருப்பரங்குன்றம் வரலாறு எப்படி மதுரையில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு ஹெச்.ராஜாவோ, வேறு யாரோ வந்து புதிதாக சொல்லித்தர அவசியம் இல்லை. திருப்பரங்குன்றம் கோவில் என்பது சர்வசாதிகளுக்கும் சொந்தமானதாகும். அந்த கோவிலில் முதலில் வழிபாடு செய்பவர்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் தான். இப்படி நமது வாழ்க்கை முறையே சமரசமான வாழ்க்கை முறையாகும். அதற்குள் வந்து வடநாட்டு வீதிகளில் நடந்த தெருச்சண்டைகளை இங்கே கொண்டு வந்து சேர்ப்பது என்பது மிகவும் ஆபத்தானது.
ஆன்லைன் வகுப்புகளில் பெரும்பாலும் சமஸ்கிருதம் சொல்லி தருவார்கள். மத வழிபாடுகள் குறித்து சொல்லி தருவார்கள். இதற்கு நிதியுதவி வழங்குவது வலதுசாரி அமைப்புகள் ஆகும். குறிப்பாக இந்து மத வழிபாட்டை அடிப்படையாக கொண்டு தான் ஆன்லைனில் ஏராளமான வகுப்புகள் இயங்குகின்றன. நமது பெற்றோர்களுக்கு இதெல்லாம் தெரியாது. குறிப்பிட்ட வயதை தாண்டியவர்கள் எல்லாம் ஆன்லைன் வகுப்பில் தேவாரம் சொல்லி தருகிறோம், திருவாசகம் சொல்லித் தருகிறோம் என அவர்களை வலதுசாரிகளுக்கான வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர். பல வருடங்களாக இது நடைபெறுகிறது. இந்த ஆபத்தை தமிழ் சமுகம் இன்னும் உணரவில்லை. நீங்கள் வட இந்தியாவிற்கு சென்றால் இதை உணர்ந்து கொள்ளலாம். நான் வடஇந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்றபோது, இரவு 6 மணிக்கு மேல் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு செல்ல முடியாது. ஏனென்றால் இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் எதிர் எதிராக பிரித்து வைத்துள்ளனர். அதனால் இந்துக்கள் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், இஸ்லாமியர்கள் இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் செல்ல முடியாது. இப்படி இயல்பான ஒரு அச்சம் அரசியல் காரணமாக சமுகத்தில் புகுத்தப்பட்டது. இது 20 வருடங்களுக்கு முன்பு இப்படி இருந்ததில்லை. நான் பஞ்சாபில் வேலை பார்த்தபோது 1970களில் அப்படி இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்கியில் எழுதிய தொடருக்காக நான் மகாராஷ்ராவில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றியுள்ளேன். நீங்கள் 6 மணிக்கு மேல் வெளியே செல்லவே முடியாது. சத்ரபதி சிவாஜியின் துல்ஜாபூர் பவானி கோவிலுக்கு இரவு 7 மணிக்கு செல்ல முடியாது என ஓட்டுநர் மறுத்துவிட்டார். இதற்கு அரசியல்தான் காரணம்.
முத்துராமலிங்க தேவர், திருப்பரங்குன்றம் முருகனை தரிசிப்பதற்காகவே திருப்பரங்குன்றத்தில் உள்ள திருநகர் பகுதியில் வந்து தங்கியிருந்தார். தேவர் சர்வ சாதிக்கும், சர்வ மதங்களுக்கும் பொதுவாக இருந்தார். அவர் நிறைய இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கும் அவர் சென்றுள்ளார். அவர் முருக பக்தர் என்றபோதும், மற்றவர்களை வெறுக்கக்கூடியவர் அல்ல. அவர் சாதி சங்கங்களுக்குள் அடங்க விரும்பவில்லை. அவர் சர்வதேச அரசியல் செய்ய விரும்பினார். தேவர், நமக்கு கிடைத்தது முக்கால் சுதந்திரம் என்று கூறினார். பாகிஸ்தான் பிரிந்து சென்றதால் அவர் நமக்கு கிடைத்தது முக்கால் சுதந்திரம் என்றார். நேதாஜி வந்து முழுமையான சுதந்திரத்தை பெற்றுத்தருவார் என்று கூறினார். அவரது நேதாஜி பத்திரிகையிலும் அதனை எழுதினார்.
ஒரு கட்டத்தில் வங்காளம், நாங்கள் இந்தியாவுடன் இருக்க விரும்பவில்லை, நாங்கள் சுதந்திர நாடு என்று காங்கிரஸ் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார்கள். ஐதராபாத் நிஜாம் கடைசி வரை இந்தியாவுடன் இணைய சம்மதிக்கவில்லை. இன்று நாம் பார்க்கும் முழு இந்தியா 1970களில் உருவானதாகும். வாக்கு வங்கி அரசியலில் மதத்தை கொண்டுவந்தால், அது மிகவும் ஆபத்தானதாகும். அது எந்த காலத்திலும் நம்மை ஒற்றுமை பட விடமுடியாமல் தடுத்து விடும். மற்றொரு மதத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி விடும். பழங்குடி மக்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை என்கின்றனர். நாங்கள் சர்ணா எனப்படும் இயற்கை வழிபாடு நடத்துபவர்கள், எங்களுக்கு தனிக்கோடு வழங்க வேண்டும். எங்களை இந்துக்கள் பட்டியலில் சேர்ப்பது ஏன்? என கேள்வி எழுப்புகின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.