ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆவடி பகுதியை சேர்ந்தவர் கஸ்பர். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த, 2015 ஆம் ஆண்டு ஜி ஆர் ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஜி.ராமச்சந்திரனிடம் 7 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் கொடுத்து பட்டாபிராம் நியூ சோராஞ்சேரி கார்டன் பகுதியில் ஒரு வீட்டுமனையை புக் செய்ததாகவும், பத்திரப்பதிவுக்காக மேலும் 1 லட்சத்து 25 ரூபாய்க்கு கேட்டு பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் பத்திரப்பதிவு செய்து தராததால் கஸ்பர் உட்பட அங்கு மனை வாங்க பணம் கொடுத்திருந்த அனைவரும் ராமச்சந்திரனிடம் முறையிட்ட போது அவர் அப்ரூவல் வாங்க வேண்டும் காத்திருங்கள் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமச்சந்திரன் கொரோனாவில் இறந்ததாகவும், அதன் பிறகு ராமச்சந்திரனின் மகன்களான சாமிகுமாருக்கும், சிவகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். திடீரென சாமிகுமார் தலைமறைவானதாகவும் அவரை கண்டுபிடித்து, சோராஞ்சேரி மனை குறித்து கேட்டபோது தந்தையின் அனைத்து சொத்துகளும் சிவக்குமாரிடம் உள்ளதாகவும் அவர் பத்திரப்பதிவு செய்து தர மறுப்பதாகவும் சாமிநாதன் கூறியதாக கஸ்பர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சிவகுமாரிடம் முறையிட்ட போது அவர் பத்திரப்பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கஸ்பர் உட்பட 850 பேர் பட்டாபிராம் நியூ சோராஞ்சேரி கார்டன் பகுதியில் மனை வாங்கி பத்திரப்பதிவுக்காக காத்திருப்பதாகவும், அதன் மதிப்பு 10 கோடிக்கு மேல் இருக்கும் எனவும், இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிவகுமாரை காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் தனது தந்தை ராமச்சந்திரனின் சொத்துக்களை தனது சகோதரர் சாமி குமாருக்கு பிரித்து கொடுக்காமல் ஒட்டுமொத்தமாக அபகரிக்க முயன்றதும், கஸ்பர் உட்பட 850 பேருக்கு மனையினை வழங்க மறுத்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆவடி மத்திய குற்றபிரிவு போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.