ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா என்று கோணத்தில் போலீஸ் விசாரணை.
ஆவடி அடுத்த புதிய கண்ணியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்கின்ற ஜொள்ளு தினேஷ் /22. C பிரிவு ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவரை மர்ம நபர்கள் சிலர் புதிய கன்னியம்மன் நகர் மசூதியின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டி, கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற் கட்ட விசாரணையில் நண்பர் தவளை என்கின்ற குமார் என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது அருந்தலாம் என வீட்டில் இருந்து தினேஷை கூட்டி சென்றுள்ளார்.
காலி மைதானத்தில் மது அருந்தி கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் ஜொல்லு தினேஷை முன்பகை காரணமாக தலை மற்றும் பல இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளனர். அங்கிருந்து தப்பித்து உயிர் பிழைத்துக் கொள்ள தினேஷ் ஓடி உள்ளார். அப்போது விடாமல் மர்ம நபர்கள் விரட்டியதில் அருகில் இருந்த பள்ளத்தை தாண்டும் போது நிலை தடுமாறி தினேஷ் கீழே விழுந்துள்ளார். விழுந்த அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நுண்ணறிவு போலீசார் ரவுடிகளை கண்காணிக்க தவறியது தான் கொலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். ஆவடி அருகே ரவுடி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.