ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா அறக்கட்டளையின் தலைவர் முரளிதரன் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியானது ஆவடி பேருந்து நிலையம் தொடங்கி சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியாக செக் போஸ்ட் அருகே அமைந்துள்ள தேவாலயம் வரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சார்ந்த 2000 மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திகொண்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.
பின்பு செக்போஸ்ட் அருகே அமைந்துள்ள தேவாலயத்தில் அனைத்து மாணவ மாணவிகளும் ஒன்றிணைந்து இந்த ஆண்டு புகை இல்லாத போகி பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையினர், மாணவ மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த சேவாலயா அறக்கட்டளை தலைவர் முரளிதரன் கூறுகையில், சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் மழை ஒரு கோர தாண்டவத்தை ஏற்படுத்தி விட்டதால், இதுவரை வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாட்டில் மழை பெய்து பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சரியான முறையில் இல்லாததே முக்கிய காரணம். ஆகையால் நாம் கொண்டாடப்போகும் போகி பண்டிகையில் மைக்காக்கள், டயர்கள் மக்கும் பொருட்களை கொளுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.