நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பாஜக அரசை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும் என துணை முதலவர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் நாசர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தனது சொந்த தொகுதிக்குச் செல்லாமல் ஆவடி வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், இந்த முறைவும் மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கான திட்டங்களே இல்லை; மாநிலத்தின் பெயரே குறிப்பிடப்படவில்லை” என்று விமர்சித்தார். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பாரதிய ஜனதா கட்சி அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல் திருவள்ளூர் தொகுதியிலும் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “இந்த தேர்தல் டெல்லி அணி மற்றும் தமிழ்நாடு அணிக்கிடையேயான மோதல். அதிமுகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவிற்கு செல்லும் ஓட்டாகும்” என்று தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.
திருவள்ளூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். உதயநிதியை வரவேற்க வெண்புறா பறக்க விடப்பட்டது. அது பிரச்சார வாகனத்தில் இருந்த உதயசூரியன் சின்னத்தில் அமர்ந்தது கவனத்தை ஈர்த்தது. மேலும், சிறுவன் ஒருவன் மாலை அணிவித்து வரவேற்றதுடன், கூட்டணிக் கட்சிகளின் கொடிகளை அவர் உயர்த்திப் பிடித்து தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தார். நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய மணியையும் அவர் மரியாதையுடன் ஏற்றுக் கொண்டார்.
இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொண்டர்கள் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். “தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமெனில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது அவசியம்” என அவர் வலியுறுத்தியுள்ளாா்.
”நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம்” – எடப்பாடியின் விமர்சனத்திற்கு எழிலன் நாகநாதன் பதிலடி…
