அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை அடுத்து புழல் சிறையில் இருந்து ஞானசேகரன் சென்னை நீதிமன்றம் அழைத்துவரப்பட்டார். மாணவி பாலியல் வழக்கில் ஐந்தே மாதத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அண்ணா பல்கலை கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 ம் தேதி பல்கலை கழக மாணவி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஞானசேகரனை கடந்த டிசம்பர் 25ம் தேதி கைது செய்தனர். விசாரணையை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி டிச.28-ம் தேதி உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல் உள்பட 12 பிரிவுகளில் ஞானசேகரன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், ஜனவரி 5-ம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். பிப்.24-ம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலானாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஏப்.23ல் சாட்சி விசாரணை தொடங்கியது; தினந்தோறும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் காவல் துறை சார்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் 75 சான்று ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தது காவல்துறை. கடந்த 20ம் தேதி விசாரணை நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வழக்கில் ஐந்தே மாதத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இன்று காலை ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராஜலக்ஷ்மி, “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது.அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளியாக அறிவிக்கிறோம். வருகின்ற ஜூன் 2ல் ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும், “இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
தி இந்து வெளியிட்ட ஆதாரம்! விக்ரம் மிஸ்ரி பகீர் வாக்குமூலம்!