பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர் , வீட்டில் எலி மருந்து அடித்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிதரன்(34), இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா(30), இவர்களுக்கு திருமணம் ஆகி விஷாலினி(6), என்ற மகளும், சாய் சுதர்சன்(1) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை இவர்கள் நான்கு பேரும் வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடித்து உள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் அவர்கள் நான்கு பேரையும் மீட்டு கோவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு நான்கு பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பின்னர் கணவன், மனைவி இருவரும் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் குன்றத்தூர் போலீசார் இறந்து போன பிள்ளைகள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் , இவரது வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் முதலில் கடையில் எலி மருந்து வாங்கி வைத்துள்ளார். அந்த மருந்தில் எலி அப்படியே ஒட்டி கொள்ளும் என்பதால் குழந்தைகள் கையை வைத்தால் பாதிப்பு ஏற்பட்டு விடும் . எனவே குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க , தான் பணிபுரியும் வங்கிக்கு மருந்து அடித்த நிறுவனத்தை ஆன்லைன் மூலம் எலி மருந்து அடிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு ஊழியர்கள் இரண்டு பேர் வந்து வீடு முழுவதும் ஆங்காங்கே எலி மருந்து வைத்து விட்டு சென்று விட்டனர்.
அளவுக்கு அதிகமான எலிமருந்தை ஊழியர்கள் வீட்டிற்குள் வைத்து விட்டு சென்றதால் இரவு தூங்கிய நிலையில் இரவு முழுவதும் வீட்டிற்குள்ளேயே எலிமருந்து நெடி சுழன்று அடித்ததில் இவர்கள் உடலுக்கு உபாதை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து வீட்டிற்கு வந்து எலிமருந்து வைத்துவிட்டு சென்ற ஊழியர்கள் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக குன்றத்தூர் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை – ரயில் நிலையத்தில் பரபரப்பு!