காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 2வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.
ரிஷப் ஷெட்டியின் நடிப்பிலும் இயக்கத்திலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ‘காந்தாரா’ திரைப்படம் வெளியானது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இந்த படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது கிளைமேக்ஸ், விஎஃப்எக்ஸ், பின்னணி இசை, ரிஷப் ஷெட்டி – ருக்மினி வசந்தின் நடிப்பு என பல பிளஸ் பாயிண்டுகள் இப்படத்தில் இருக்கின்றன. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவை பெறுவதோடு, வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.
அந்த வகையில் இப்படம் முதல் வார முடிவில் ரூ.509.25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இரண்டாவது வாரமாக வெற்றி நடைபோடும் இப்படம் 2வது வார முடிவில் ரூ.1000 கோடியை கடந்துவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.