பெண் தொழிலதிபர் ரூ.300 கோடி மோசடி வழக்கிய சிக்கி வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது கைது!
தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் தொடங்கி குறைந்த விலையில் அதிக வசதியுடன் கூடிய குடியிருப்பு கட்டித்தரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு வீடுகளை கட்டி விற்றுவந்தார்.
அங்குள்ள மல்லம்பேட்டை பகுதியில் 325 வீடுகளை கட்டினார். ஆனால் அவற்றில் 65 வீடுகளுக்கு மட்டுமே உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி தந்துள்ளது. மற்ற குடியிருப்புகள் பெரும்பாலும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி நிர்வாகம் கடும் ஆட்சேபணை தெரிவித்திருந்தபோதும் அதனை மீறி அவர் வீடு கட்டியுள்ளார். பின்னர் போலி ஆவணங்கள் காட்டி பலருக்கும் விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதுதொடர்பான வழக்கின்பேரில் கடந்த 2021ம் ஆண்டு அவர் கட்டிய 201 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நீர்நிலையில் கட்டிய 26 வீடுகளை ஜேசிபி மூலம் இடித்து அகற்றனர். விஜயலட்சுமி சுமார் ₹300 கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடிவந்தனர். பின்னர் அவர் வெளிநாடு தப்பாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் `லுக்அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு ஷம்ஷாபாத் விமான நிலையம் வழியாக வெளிநாடு தப்ப முயன்ற விஜயலட்சுமியை விமான நிலைய அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். பின்னர் தகவலறிந்து வந்த ஷம்ஷாபாத் போலீசார், விஜயலட்சுமியை கைது செய்து பின்னர் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.