திருவள்ளூர் அருகே சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு தொகை பெற நில உரிமையாளரிடம் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில எடுப்பு தாசில்தார் உட்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரையிலான 133 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்னை வெளிவட்டச் சாலை திட்டம் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இச்சாலை திட்டத்தின் நில எடுப்புக்கான அலகு-4 திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான நில எடுப்பு செய்யப்பட்டு நில உரிமையாளருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அச்சாலை திட்ட வழித்தடமான போளிவாக்கம் பகுதியில் உள்ள வேல்யூ ஸ்பேஸ் என்ற தொழிற்சாலைக்கு சொந்தமான 3.57 சதுர மீட்டர் பரப்பளவில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதால், அதற்கான இழப்பீடு தொகை 48 லட்சம் ரூபாயை கொடுப்பதற்கு நில எடுப்பு தாசில்தார் எட்வர்ட் வில்சன் 5 சதவீதம் கமிஷன் அதாவது 9 லட்சத்து 60 ஆயிரம் தொகை நில உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அத்தகைய தொகையை தர மறுப்பு தெரிவித்த நில உரிமையாளரிடம் கடைசியாக 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக நில எடுப்பு தாசில்தார் எட்வர்ட் வில்சன் கேட்டுள்ளார்.

நிலத்தின் உரிமையாளர் ஜஸ்டின் என்பவர் லஞ்சம் கொடுப்பதை விரும்பாத அவர் திருவள்ளூர் ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவி கொடுத்துள்ளனர். அத்தகைய பணத்தை எட்வர்ட் வில்சன் தனது கீழ் உள்ள இடைத்தரகரான கோமதி நாயகம், வெள்ளத்துரை மூலமாக பெற்றுள்ளார். திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கணேசன் ஆய்வாளர்கள் தமிழரசி, மாலா தலைமையிலான போலீசார் மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்து, மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்த உரிமையாளர்களுக்கு இழப்பீடுத் தொகை அளிப்பதற்கு லஞ்சம் பெற்ற நில எடுப்பு தாசில்தார் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.