Homeசெய்திகள்இந்தியாகுழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்

குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்

-

- Advertisement -

கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் 3000 -க்கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டெல்லி அரசு. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் மீறி 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இடத்தை இடிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதால், டெல்லியில் குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் தமிழர்கள் வாழ்கின்றனா்.குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்தலைநகர் டெல்லியில் முக்கிய ரயில் நிலையமாக விளங்குகிறது நிஜாமுதீன் ரயில் நிலையம். இங்கிருந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இந்த நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே பாரா புல்லா, மதராசி கேம்ப் என்ற இடத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் இங்கு அதிகமாக வசிக்கிறார்கள். குடிசைகளில் வசிக்கும் இந்த குடும்பத்தாரில் ஆண்கள் தினசரி கார் துடைப்பது மற்றும் கார் ஓட்டுநர் போன்ற வேலைகள் செய்வது, பெண்கள் வீட்டு வேலை செய்தும் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

இவ்வளவு தமிழர்கள் வசிக்கும் இடத்தில் கழிவு நீர் ஓடை செல்வதாகவும் அந்த கழிவு நீர் ஓடையை சரி செய்வதாக கூறி உடனே இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளது டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி (DDA). சாக்கடை சரி செய்கிறோம் என்ற பெயரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் எங்களை இந்த பகுதியில் இருந்து வேண்டுமென்றே அப்புறப் படுத்துகிறது இந்த மாநில அரசு என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் இங்கு வாழும் தமிழர்கள்.

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சி சேர்ந்தவர்களும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒருபோதும் உங்களது வீடுகளை இடிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா அரசு அமைந்த உடன் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டு, வீடுகளை இடிக்க முடிவு செய்துள்ளது இந்த மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் இந்த பகுதியில் இருந்து 50 – கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரேலா பகுதிக்கு போக சொல்கிறார்கள் என்றும் இந்த பகுதியிலேயே வாழ்ந்து வருவதால் அருகாமையில் உள்ள பள்ளிகளில் படித்து வருவதாகவும் 50 – கிலோ மீட்டர் தொலைவான பகுதிக்கு சென்றால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கும். அது மட்டுமில்லாமல் இந்த சுற்றுவட்டார பகுதிகளிலேயே வேலைவாய்ப்பு உள்ளதாகவும், தங்களை போக சொல்லும் இடத்தில் வேலை கிடைப்பது கடினமாகி விடும் என்றும் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

எனவே அனைத்து வசதிகள் இல்லாத இந்த குடிசைகளில் வாழ்ந்தாலும் போதும் இங்கேயே எங்களை வாழ விடுங்கள் என்று கூறும் இந்த தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த டெல்லி தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒன்றிய அரசு பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டை தடுக்கிறது – அதிகாரிகள் குற்றச்சாட்டு

MUST READ