ஜி-20 மாநாட்டிற்கிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நடப்பாண்டிற்கான ஜி-20 அமைப்பு மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்படி முதல்நாளான இன்று பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்தவகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் , பிரதமர் மோடி இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, தொழில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவும், பிரிட்டனும் தொடர்ந்து ஆரோக்கியமான மற்றும் நிலையான உறவுக்காக பங்காற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Great to have met PM @RishiSunak on the sidelines of the G20 Summit in Delhi. We discussed ways to deepen trade linkages and boost investment. India and UK will keep working for a prosperous and sustainable planet. pic.twitter.com/7kKC17FfgN
— Narendra Modi (@narendramodi) September 9, 2023