பாமகவில் தற்போது மாமனாருக்கும் கணவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அன்புமணியின் மனைவி சவுமியா
ராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி கோவிலில் பிராத்தனை செய்துள்ளார். தனது மகள்களின் கையால் விரலி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாத்திய சவுமியா அன்புமணி, கட்சியின் சின்னமான மாம்பழத்தையும் வைத்து மனமுருகி வேண்டினார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் நம்புநாயகி திருக்கோயில் உள்ளது. அதாவது ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள்.
அத்துடன் ராமேஸ்வரத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். 600 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் தீவில் உள்ள இந்த பகுதி, தாழை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அப்போது விறகு வெட்டும் நபர்கள் ஒரு மரத்தை வெட்டிய போது அதிலிருந்து ரத்தம் கொட்டியது. அப்போது ஒருவருக்கு அருள் வந்தது.
அவர், இந்த பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியே எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள் என்றாராம். அப்படி வந்தவர்தான் இந்த நம்பு நாயகி அம்மன்.
இங்கு அம்மனுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தால் வேண்டுதல் நிறைவேறும் என்கிறார்கள். அந்த வகையில் இந்த கோயிலுக்கு தனது மகள்கள் சஞ்சுத்ரா, சம்யுக்தா ஆகியோருடன் சவுமியா அன்புமணி வருகை தந்தார். அங்கு விரலி மஞ்சளை தனது மகள்களின் கையால் அம்மியில் அரைக்க வைத்தார்.
அரைத்த மஞ்சளை ஒரு இலையில் எடுத்து வைத்து குருக்களிடம் கொடுத்தார். பின்னர் சுவாமிக்கு தேவையான மாலை, பூ, அர்ச்சனை பொருட்களை கொடுத்த சவுமியா, தனது கட்சியின் சின்னமான மாம்பழத்தையும் அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டார். அப்போது மகள்களும், சவுமியாவும் கண்களை மூடி பிரார்த்தனை செய்தனர்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் கணவருக்கும், மாமனாருக்கும் இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும், குடும்ப ஒற்றுமைக்காகவும் சௌமியா அன்புமணி வேண்டிக்கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.